சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள்.. டிஐஜி ரூபா சுமத்திய குற்றப் பட்டியல் இதுதான்
சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகளை பெற 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. டிஐஜி ரூபா சுமத்திய குற்றங்களின் பட்டியல் இதுதான்.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பரபரப்பு புகாரை எழுப்பினார் சிறைத் துறை டிஐஜி ரூபா.
சிறைத்துறை டிஜிபிக்கு சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் சசிகலாவுக்கு சிறையில் விஐபிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இதனை சிறை நிர்வாகம் மறுத்து வந்த நிலையில், ரூபாவின் இந்தப் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரூபா பட்டியலிட்டுள்ள குற்றங்கள் இவைதான்.
சசி கொடுத்த ரூ.2 கோடி லஞ்சம்
சசிகலாவுக்கு விஐபி சலுகைகளை வழங்க சிறைத்துறை டிஜிபிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டது. இதன் மூலம் சசிகலாவுக்கு சிறப்பு சமையலறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் விஜபிக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
முத்திரைத்தாள் மோசடி கைதி தெல்கிக்கு விஜபி மசாஜ்
முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அப்துல் கரீம் தெல்கிக்கு சிறப்பு மசாஜ் சிறையில் செய்யப்படுகிறது. அவருக்கு மசாஜ் செய்வதற்கும் அவரது வீல்சேரை தள்ளுவதற்கும் 4 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் அங்கு ராஜமரியாதையுடன் நடத்தப்படுகிறார்.
சிறையில் கஞ்சா
சிறையில் கஞ்சா மற்றும் போதை பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக 25 கைதிகளை ஆய்வு செய்ததில் அவர்களில் 18 பேர் போதை பொருள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
தவறாக பயன்படுத்தப்படும் ஆவண காப்பக அறை
கைதிகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் அறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கைதிகள் வேலை செய்கிறார்கள். இதனால் முக்கிய ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவர்களை மிரட்டும் கைதிகள்
வெளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கைதிகள் சிறையில் உள்ள மருத்துவர்களை மிரட்டுகின்றனர். இது தொடர்பாக பல மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன.
கைதிகளிடையே விளையாடும் தூக்க மாத்திரைகள்
சிறையில் உள்ள மருந்தகத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர் கைதிகள். கைதிகள் விரும்பிய வகையில் தூக்க மாத்திரைகள் அவர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் அதை தவறான முறையில் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவ அறிக்கைகள் மாயம்
கைதிகள் மருத்துவ அறிக்கைகளை அழிக்க முயற்சிக்கின்றனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த சில மருத்துவ அறிக்கைகள் மாயமாகியுள்ளன.
மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல்
கடந்த 29 ஆம் தேதி தலைமை மருத்துவ ஊழியர் உட்பட 10 பேரை கைதி ஒருவர் தாக்கியுள்ளார். இரும்பு கம்பியால் கைதி தாக்குதல் நடத்திய போது, அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஒருவரும் இல்லை.