2 லட்சம் படையினர்.. ஆயிரக்கணக்கான வாகனங்கள்..தேர்தல் பாதுகாப்புக்கு
டெல்லி: லோக்சபா தேர்தலை அமைதியாகவும், பிரச்சினை ஏதுமின்றியும் நடத்தி முடிக்க விரிவான பாதுகாப்புஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
2 லட்சத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர், ஆயிரக்கணக்கான வாகனங்கள், 12க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
வன்முறை ஏதும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7 தொடங்கி
ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 9 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் தயாராகி வருகிறது.

2 மாத தேர்தல்
கிட்டத்தட்ட 2 மாத காலத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்துறை அமைச்சகம், தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து மேற்கொண்டுள்ளது.

543 தொகுதிகள்... 81.4 கோடி வாக்காளர்கள்
மொத்தம் 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 81.4 கோடி வாக்காளர்கள் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்கவுள்ளனர்.

மாபெரும் வேலை
இதுகுறித்து உள்துறை அமைச்சக இணைச் செயலாலர் கணபதி கூறுகையில் இது மாபெரும் வேலை. இருப்பினும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். குறிப்பாக நக்சலைட் பாதிப்பு உள்ள மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

2 லட்சம் பாதுகாப்புப் படையினர்
நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகளுக்காக சிஆர்பிஎப், எல்லைப் பாதுகாப்புப் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

100க்கும் மேற்பட்ட ரயில்கள்
பாதுகாப்புப் படையினரை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கம்பெனிக்கும் 2 கோச்சுகள்
ஒவ்வொரு கம்பெனி பாதுகாப்புப் படையினருக்கும் தலா 2 ஸ்லீப்பர் கோச்சுகளை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள்
அதேபோல ஆயிரக்கணக்கான தனியார் வாகனங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுளளன. சாலை மார்க்கமான படையினரின் பயணத்திற்கு இவை பயன்படுத்தப்படும்.

ஹெலிகாப்டர்கள்
லோக்சபா தேர்தல் பாதுகாப்புக்காக 12 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக இந்திய விமானப்படையை அணுகியுள்ளோம் என்றார் கணபதி.

ஏப்ரல் 7 முதல் மே 12 வரை
ஏப்ரல் 7ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 12ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.












Click it and Unblock the Notifications