லோக்சபாவில் பேப்பரை கிழித்து எறிந்த சமாஜ்வாடி எம்பிக்கு சுமித்ரா மகாஜன் வார்னிங்!
நாடாளுமன்ற லோக்சபாவில் ஆவணங்களை கிழித்து எறிந்த சமாஜ்வாடி கட்சி எம்பி அக்ஷய் யாதவுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லி : லோக்சபாவில் ஆவணங்களை கிழித்துதெறிந்து ஆவேசமாக கத்திய சமாஜ்வாடி உறுப்பினர் அக்ஷய் யாதவ் அவை மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடியதால், ரூபாய் நோட்டு பிரச்சனையை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.
இந்நிலையில் இன்று லோக்சபா தொடங்கியதிலிருந்தே ரூபாய் நோட்டு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சமாஜ்வாடி கட்சி எம்பி அக்ஷய் யாதவ் கையிலிருந்த ஆவணங்களை கிழித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது எறிந்தார்.
இதனால் கடும் கோபமடைந்த சுமித்ரா மகாஜன், சமாஜ்வாடி எம்பியை எச்சரித்ததோடு இது ஒழுங்கற்ற செயல் என்றும் கண்டித்தார்.
ஆக்ஷய் யாதவ் மீது அவை மாண்புக்கு குந்தகம் ஏற்படுத்திய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. எம்பி அக்ஷய் யாதவ், முலாயம் சிங்கின் சகோதரரும் ராஜ்யசபா எம்பியுமான ராம்கோபால் யாதவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.