திருமணம் செய்ய மறுத்த மருத்துவ மாணவி.. கழுத்தறுத்து கொன்ற காதலன்.. அலறும் ஆந்திர பிரதேசம்
அமராவதி: வேலை இல்லாததை காரணம் காட்டி தன்னை திருமணம் செய்ய மறுத்த மருத்துவ மாணவியை அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் உடல் முழுவதும் வெட்டி கொடூரமாக கொலை செய்த இளைஞரை ஆந்திரா போலீஸார் கைது செய்துள்ளனர்.
4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு பின்னர் திருமணம் செய்ய முடியாததால் மாணவியை கொலை செய்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாக, அதே பாணியில் ஆந்திராவில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கிறது.
மாணவி மர்ம மரணம்.. பற்றி எரிந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி! 144 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு
மருத்துவ மாணவி
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் தபஸ்வி (21). இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார். பெற்றோர்கள் மும்பையில் இருப்பதால், விஜயவாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். இவருக்கும், கிருஷ்ணா மாவட்டம் மணிக்குண்டா பகுதியைச் சேர்ந்த ஞானேஸ்வர் (26) என்பவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியது.
வேலையை இழந்த காதலன்
பொறியியல் பட்டதாரியான ஞானேஸ்வர், ஒரு தனியார் நிறுவத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது வேலை பறிபோனது. இதனால் வேறொரு வேலையை ஞானேஸ்வர் தேடி வந்தார். இதனிடையே, சில காரணங்களால் ஞானேஸ்வருக்கும், தபஸ்விக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சில மாதங்களாக பேசாமல் இருந்துள்ளனர். பின்னர், ஞானேஸ்வரை தொடர்புகொண்ட தபஸ்வி, நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஞானேஸ்வர் தபஸ்வி மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.
அடிக்கடி தொந்தரவு
மேலும், தபஸ்வியை தினமும் சந்தித்து ஞானேஸ்வர் தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தபஸ்வி, குண்டூர் மாவட்டம் தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இதனிடையே, தபஸ்விக்கும், அவரது காதலுனுக்கும் இடையேயான தகராறை கேள்விப்பட்ட அவரது தோழி, இருவரையும் சேர்த்து வைக்க முடிவு செய்தார்.
தோழியால் வந்த வினை
இதனைத் தொடர்ந்து, தபஸ்விக்கு தெரியாமல் ஞானேஸ்வரனுக்கு போன் செய்த தோழி, தனது வீட்டுக்கு வந்து தபஸ்வியை சந்தித்து, பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதன்பேரில், நேற்று முன்தினம் அங்கு வந்த ஞானேஸ்வர், தபஸ்வியிடம் பேசியுள்ளார். அப்போது, நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஞானேஸ்வர் கூற, "உனக்குதான் வேலை இல்லையே.. உன்னை எப்படி நான் திருமணம் செய்துகொள்ள முடியும்?" என தபஸ்வி கேட்டுள்ளார்.
கழுத்தறுத்து கொலை - கைது
இதனால் ஆத்திரமடைந்த ஞானேஸ்வர், தான் மறைத்து வைத்திருந்த அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால், கண்ணிமைக்கு நேரத்தில் தபஸ்வியை உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தோழி, ஞானேஸ்வரை தடுக்க முயன்றார். ஆனால் அவரை தள்ளிவிட்ட ஞானேஸ்வர், கத்தியால் தபஸ்வியின் கழுத்தை அறுத்தார். இந்த சத்த்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ஞானேஸ்வரை கடுமையாக தாக்கி கட்டி வைத்தனர். பின்னர் தபஸ்வியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகலவறிந்த போலீஸார், அங்கு வந்து ஞானேஸ்வரை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.