அந்தமான் ஆளில்லா தீவுகளில் விடுதலைப் புலிகள்..சொல்கிறது உள்துறை அமைச்சகம்
டெல்லி: அந்தமான் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பதுங்கி இருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மியான்மர், வங்க தேசம், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி வருவதாக அந்தமான் யூனியன் பிரதேச அரசு புகார் கூறி வருகிறது.

இலங்கையிலிருந்து 1960 மற்றும் 70-களில் பல அகதிகள் அந்தத் தீவுகளில் குடியமர்த்தப்பட்டனர். அப்பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், அவர்களிடையே ஈழ விடுதலைக்கான ஆதரவு அதிகம் உள்ளது.
பலர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகவும் இருப்பதால் அவர்களின் உதவியுடன், போரில் தப்பிய விடுதலைப் புலிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குள் ஊடுருவலாம்.
அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அப்பகுதியிலுள்ள ஆளில்லா தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்தமான் தீவுகளின் புவியியல் அமைவிடமும், அதிலுள்ள காடுகளும் அவர்களுக்கு மிகவும் ஏற்புடையவையாக அமைந்துள்ளன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8249 சதுர கி.மீ.க்கு பரவியுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதி 572 தீவுகளைக் கொண்டது. இவற்றில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிப்பதால் ஆளில்லா தீவுகள் புகலிடமாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications