"என் ஏரியாவில் ரெய்டு நடத்துனா தலைகீழா தொங்க விட்ருவேன்” அதிகாரியை மிரட்டிய அமைச்சர்.. ஆடியோ.. பரபர!
போபால் : அரசு அதிகாரியை, தலைகீழாக கட்டித் தொங்க விடுவேன் என அமைச்சர் போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இங்கு இல்லை, மத்திய பிரதேசத்தில்.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அரசு அதிகாரிகள் மீது முதல்வர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சராக இருக்கும் ராம்கேலாவன் படேல், அரசு அதிகாரியை போனில் மிரட்டியுள்ளார்.
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரியை போனில் அழைத்து, உன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுவேன் என அவர் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அரசு
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. கடமையைச் செய்யத் தவறும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்து வருகிறார். அறிவிப்போடு நிற்காமல், சமீபத்தில் ஒரு அரசு விழாவில் வைத்து சில அதிகாரிகளை, சஸ்பெண்டும் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
பாஜக அமைச்சர்
இது ஒருபுறமிருக்க, ம.பி முதல்வரின் உத்தரவுக்கு முரணாக, "என் ஏரியாவில் சோதனை நடத்தக்கூடாது" என பாஜக அமைச்சர் ஒருவர் அரசு அதிகாரியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ராம்கேலாவன் படேல்.
தலைகீழா தொங்க விடுவேன்
அமைச்சர் ராம்கேலாவன் படேல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியுடன் பேசுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "என்னுடைய தொகுதியான அமர்பதானில் உள்ள கடைகளில் கலப்பட உணவு தொடர்பாக எவ்வித சோதனைகளும் நடத்தக் கூடாது. வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய கூடாது. மீறினால், உன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்" என அமைச்சர் அந்த அதிகாரியை மிரட்டுகிறார்.
பல் இளிக்கிறது
இந்த ஆடியோ வெளியாகி ம.பி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக அமைச்சர் ராம்கேலாவன் படேல், மிரட்டப்பட்டதாக கூறப்படும் அதிகாரி என யாருமே விளக்கம் அளிக்கவில்லை. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை, அவரது அமைச்சரவை சகா ரூபத்தில் பல் இளிக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.