வாட்? அடையாள அட்டையை திருடி.. 36 ஆண்டுகள் அரசு ஊழியராக இருந்த நபர்.. "விசித்திர" சம்பவம்
நம்முடன் நன்றாக பேசி பழகும் அனைவரும் நம் நண்பர்களோ, நலம் விரும்பிகளோ அல்ல என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது.
போபால்: தனது நண்பனின் அடையாள அட்டையை திருடி அதன் மூலம் அரசுப் பணி பெற்று சுமார் 36 ஆண்டுகாலம் அரசாங்கத்தையே ஒருவர் ஏமாற்றிய விசித்திர சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் அனுப்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாதாய் ராம். இவர் 1980-களில் அங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவரது நண்பரான நரசிங் தேவ்கான் வேறொரு தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்திருக்கிரார்.
இந்த சூழலில், அந்த நிலக்கரிச் சுரங்கத்தை மத்திய பிரதேச அரசாங்கம் கையில் எடுக்க போகும் செய்தி நரசிங் தேவ்கானுக்கு கிடைத்துள்ளது. ஆனால், இந்த விஷயம் தாதாய் ராமுக்கு தெரியவில்லை.
என் வீட்டுக்கு வாட்ச்மேன் கூட கிடையாது.. மக்கள் எளிதாக அணுகலாம்.. இபிஎஸ் அணி வேட்பாளர் தென்னரசு!
அடையாளத்தை திருடிய நண்பன்
அந்த சமயத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பார்கள். அதை அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்நிலையில், தாதாய் ராமின் நிலக்கரிச் சுரங்க அடையாள அட்டை உள்ளிட்ட சில அடையாள ஆவணங்களை நரசிங் திருடி வைத்துக் கொண்டார். அப்போது மத்திய பிரதேச அரசாங்கம் நிலக்கரிச் சுரங்கத்தை கையகப்படுத்தியதால், அதில் வேலை செய்யும் அனைவரையும் அரசு ஊழியர்களாக மாற்றியது. ஆனால், தாதாய் ராமிடம் அடையாள அட்டை இல்லாததால் அவரை வேலைக்கு சேர்க்க முடியாது என நிர்வாகம் கூறிவிட்டது. இதனால் மனம் நொந்துபோன தாதாய்ராம் தனது சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு திரும்பினார்.
சுகபோக வாழ்க்கை
இந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த நரசிங் தேவ்கான், அந்த அடையாள அட்டையை நிலக்கரிச் சுரங்க நிர்வாகத்திடம் காட்டி தாதாய்ராம் என்ற பெயரில் அரசு வேலையில் சேர்ந்தார். ஆயிரக்கணக்காோர் வேலை பார்க்கும் இடம் என்பதால், நிர்வாகத்தால் இன்னார் தான் இவர் என்பதை அடையாளம் காண முடியாது. இதை பயன்படுத்திக் கொண்ட அரசாங்க ஊழியராக வாழ்க்கையை தொடங்கினார். அப்போதுதான் அவருக்கு புதிதாக திருமணமும் நடைபெற்றதால், இந்த விஷயத்தை அவரது மனைவியிடம் மட்டுமே கூறியிருக்கிறார் தாதாய்ராம். பின்னர் சிறிது சிறிதாக வீடு, நிலம் என சொத்துகளை அவர் வாங்கினார். தனது பிள்ளைகளை கான்வென்ட்டில் படிக்க வைத்தார்.
வறுமையில் வாழ்ந்த தாதாய்ராம்
ஆனால், தனது அடையாளத்தை நண்பனே திருடிவிட்டான் என்று தெரியாத அப்பாவி தாதாய்ராம், சத்தீஸ்கரில் ஒரு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வாழ்க்கை நடத்தினார். இவரது பெயரை திருடிய நண்பனும், அவரது குடும்பத்தினரும் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க, தாதாய்ராமோ 2 வேளை உணவு கூட கிடைக்காத வறுமை நிலையில் வாழ்க்கையை நடத்தினார். அவரது பிள்ளைகள் சாதாரண அரசுப் பள்ளிக்கூடத்தில் கந்தலும் கசங்கலுமான உடைகளை போட்டு சென்று கொண்டிருந்தனர்.
தெரியவந்த உண்மை
காலங்கள் உருண்டோடின. நரசிக் தேவ்கான் அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்று 10 ஆண்டுகளாக பென்ஷனும் வாங்கி வாழ்ந்து வந்தார். பின்னர் கடந்த 2020-இல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அதன் பின்னர், அவரது மனைவி தனது கணவர் பெயரை தாதாய்ராம் என பொய்யை கூறி ஓய்வூதியத்தை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த மாதம் பேச்சுவாக்கில் நடந்த உண்மையை தாதாய்ராமின் மனைவி உளற, அவரது மகன் கில்வான் தேவ்கானுக்கு தெரியவந்துள்ளது. ஒருவரின் வாழ்க்கையையே நாசமாக்கி, நாம் இப்படி வாழ்ந்திருக்கிறோமோ என எண்ணி மனம் வெதும்பி இருக்கிறார் கில்வான் தேவ்கான்.
"காலம் திரும்பவா போகிறது?"
பின்னர், தாதாய்ராமின் ஊருக்கு சென்று அவரிடமும், அவரது பிள்ளைகளிடமும் தனது தந்தை செய்த மோசடி குறித்து சொல்லி அழுதிருக்கிறார் கில்வான் தேவ்கான். இதையடுத்து, தாதாய்ராமின் மகன் ஹக்கூர் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க, நரசிங் தேவ்கானின் மனைவிக்கு வந்து கொண்டிருந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. பின்னர், அவரது மனைவி மீது போலீஸார் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தாதாய்ராமின் மகன் ஹக்கூர் கூறுகையில், "நண்பன் என நினைத்த ஒருவர் எங்கள் தந்தையின் வாழ்க்கையிலேயே விளையாடி இருப்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. என் தந்தைக்கு 75 வயதாகிறது. இப்போது வரை அவரும் நாங்களும் வறுமயைில்தான் இருக்கிறோம். எனது மாத ஊதியம் 6 ஆயிரத்தில்தான் எங்கள் வாழ்க்கை நடக்கிறது. இப்போது வருத்தப்பட்டு என்ன செய்வது.. காலம் திரும்பவா போகிறது? அவர்கள் நன்றாக இருந்துவிட்டு போகட்டும்" என்றார்.