'மேகி நூடுல்ஸ்': 13 மாதிரிகளை ஆய்வு செய்ய நுகர்வோர் கோர்ட் உத்தரவு
டெல்லி: வெவ்வேறு காலத்தில் தயாரிக்கப்பட்ட மேகி நுாடுல்சின் பதிமூன்று மாதிரிகளை ஆய்வு செய்யும்படி மத்திய அரசுக்கு தேசிய நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்று மேகி நூடுல்ஸ். சமீபத்தில் அதன் சுவையைக் கூட்டுவதற்கு அதிகப்படியான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் விற்பனை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து சந்தையில் இருந்து மேகி நூடுல்ஸை நெஸ்லே வாபஸ் பெற்றது.
பின்னர், இது தொடர்பாக மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. மேலும், மேகி நுாடுல்சின் ஐந்து மாதிரிகளை, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு கூடங்களில் ஆய்வு செய்து, முடிவை அறிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதுவரை நுாடுல்ஸ் விற்பனை செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வி.கே.ஜெயின், பி.சி.குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது.
அதனைத் தொடர்ந்து, ‘வெவ்வேறு காலங்களில் தயாரிக்கப்பட்ட மேகி நுாடுல்சின் பதிமூன்று மாதிரிகளை, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு மையத்தில் இந்த சோதனையை நடத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.