சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த உடனேயே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மமதா!
கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தல் 6 கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த 2 மணிநேரத்திலேயே தமது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
மேற்குவங்க மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி மே 5-ந் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இந்த அறிவிப்பை வெளியிட்ட 2 மணி நேரத்தில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தமது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மமதா, மேற்கு வங்கத்தில் அமைதியான சூழல் நிலவி வருகிறது. மதம் மற்றும் சமூக ரீதியான பதற்ற நிலை எதுவும் மாநிலத்தில் இல்லை.
சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சி சார்பில் 31 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, 45 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறுபான்மை சமூகத்தைச் சேந்த 57 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாநில முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றார். இந்த மதன் மித்ரா, சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சிறையில் உள்ளவர்.
மேலும் கால்பந்து விளையாட்டு வீரர்களான ரஹீம் நபி, பூட்டியா, கிரிக்கெட் வீரர் ரதன் சுக்லா, நடிகர் சோஹம் சட்டர்ஜி ஆகியோரையும் வேட்பாளர்களாக மமதா களத்தில் இறக்கியுள்ளார்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் மகள் பைசாலியையும் வேட்பாளராக்கியுள்ளார் மமதா.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.