திரிணாமுல் காங்-இல் அதிகரிக்கும் விரிசல்.. நிலைமையை சமாளிக்க மம்தா எடுத்த அதிரடி முடிவு.. பலன் தருமா
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி இடையே விரிசல் அதிகரித்து வரும் நிலையில், இதை சமாளிக்க திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே கூட மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது கோவா மாநிலத்தில் போட்டியிடும் நிலையில், அபிஷேக் பானர்ஜி அங்குத் தேர்தல் பணிகளைக் கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அபிஷேக் பானர்ஜியை மம்தா மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
பாஜகவிடம் காசு வாங்கிக்கோங்க.. எங்களுக்கு ஓட்டு போடுங்க - கோவாவை பரபரப்பாக்கிய மம்தா மருமகன்!
தேசிய செயற்குழு
இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்க மம்தா பானர்ஜி மூத்த தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஹக்கீம், தேசிய துணைத் தலைவர் சுப்ராதா பக்சி, அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ஆகியோரும், அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க 20 பேர் கொண்ட தேசிய செயற்குழுவை திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முக்கிய நடவடிக்கை
மம்தா திரிணாமுல் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகத் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய செயற்குழுவில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்த அறிவிப்பை மம்தா பானர்ஜி அறிவித்தார். அபிஷேக் பானர்ஜியின் செயல்பாடுகளால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மம்தா
மேற்கு வங்கத்தைத் தாண்டி நாடு முழுக்க திரிணாமுல் காங்கிரஸ் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கும் இளைய தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் கட்சியைப் பிளவுபடுத்தக்கூடியது. எனவே, இதைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவே மம்தா இந்த தேசிய செயற்குழுவை அமைத்துள்ளார். இந்த செயற்குழுவில் திரிணாமுல் காங்கிரசின் அமித் மித்ரா, பார்த்தா சாட்டர்ஜி, சுப்ரதா பக்ஷி, சுதிப் பந்தோபாத்யாய், அபிஷேக் பானர்ஜி, அனுப்ரதா மொண்டல், அரூப் பிஸ்வாஸ், ஃபிர்ஹாத் ஹக்கிம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மோதல்
இடையே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிரசாந்த் கிஷோர் தரப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. திரிணாமுல் மூத்த தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா, தனது சமூக வலைத்தள கணக்கை பிரசாந்த் ஐபேக் குழுவினர் தவறாகப் பயன்படுத்தியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த ஐபேக் தரப்பு, "திரிணாமுல் கட்சி அல்லது அதன் தலைவர்களின் எந்த சமூக வலைத்தள கணக்குகளையும் ஐபேக் கையாளவில்லை. இது குறித்த சிலர் அறியாமல் பேசி வருகின்றனர். அல்லது தெரிந்தே பொய் கூறி வருகிறார்கள் என அர்த்தம். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் விசாரணை நடத்த வேண்டும்" என விளக்கம் அளித்தது.
Recommended Video
எஸ்எம்எஸ் உரையாடல்
கடந்த சில வாரங்களாகவே, மம்தா பானர்ஜிக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில ஊகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவருக்கும் இடையே நடந்த எஸ்எம்எஸ் உரையாடலை ஆனந்த பஜார் பத்ரிகா என்ற பெங்காலி நாளிதழில் வெளியிட்டுள்ளது. அதாவது வங்காளம், மேகாலயா மற்றும் ஒடிசாவில் திரிணாமுல் காங். கட்சிக்காக இனி பணியாற்ற விரும்பவில்லை என்று பிரசாந்த் கிஷோர் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதற்கு மம்தா 'நன்றி' என்று மட்டும் பதில் அளித்ததாக ஆனந்த பஜார் பத்ரிகாவில் கூறப்பட்டுள்ளது. இப்படி திரிணாமுல் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.