தேர்தல் நடத்தை விதிகளா அது? மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா
கொல்கத்தா: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள் என விமர்சித்துள்ளார்,
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நேற்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது, அப்போது கூச் பிகார் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மோடி நடத்தை விதிகள்
இதையடுத்து, நான்கு வாக்காளர்கள் உயிரிழந்த இடத்திற்கு அரசியல் கட்சியினர் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் எனத் தேர்தல் ஆணையம் மாற்றிக்கொள்ளலாம்.
4ஆம் நாள் அங்கு இருப்பேன்
பாஜக தனது எல்லா சக்தியையும் பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் இந்த உலகிலுள்ள எந்த சக்தியும் நான் என் மக்களுடன் இருப்பதையும் அவர்களின் வலியைப் பகிர்ந்து கொள்வதையும் தடுக்க முடியாது. கூச் பிகாரில் உள்ள எனது சகோதர சகோதரிகளை நான் சந்திப்பதை அவர்களால் 3 நாட்கள் தடைசெய்ய முடியும், ஆனால் 4ஆம் நாள் நான் நிச்சயம் அவர்களுடன் இருப்பேன் என மம்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் தடை
கூச் பிகார் பகுதிக்கு அரசியல் தலைவர்கள் நுழைவதை 72 மணி நேரத்திற்குத் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. அதேபோல ஐந்தாம் கட்ட தேர்தலையும் முன்கூட்டியே முடிக்க உத்தரவிட்டுள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே பிரசாரத்தை நிறைவு செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு ஏன்
நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்தும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் வாக்குப்பதிவு மையம் எண் 126இல் நேற்று திடீர் குழப்பம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களைப் பறிக்க முயன்றனர். இதனால் வேறு வழியின்றி அங்கிருந்த வாக்காளர்களைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.