"நான் அப்பாவி".. பலாத்கார கேஸிலிருந்து தப்பிய நபர் செய்த 'அடப்பாவி' காரியம்.. ப்பா இழப்பீடு வேணுமாம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுவித்த நிலையில், அந்த நபர் தனக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 கோடியை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் பகுதியை சேர்ந்தவர் காண்டிலால் பீல். 35 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்தது. புகாரையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். இது சாதாரண சிறிய புகார்தான் என்று நினைத்து சென்றுள்ளார். ஆனால் காவல்நிலையம் சென்ற பின்னர்தான் தெரிய வந்துள்ளது, இது கூட்டு பாலியல் பலாத்கார புகார் என்று.
அதாவது 2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி உள்ளுர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்த புகாரை அளித்திருக்கிறார். தான் ஓரிடத்தில் வழிதவறி நின்றபோது காண்டிலால் தன்னை தனது சகோதரனிடம் அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றார். ஆனால் அவர் வேறு ஒருவரிடத்தில் என்னை ஒப்படைத்தார். அந்த இரண்டாவது நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த சம்பவத்தில் காண்டிலாலும் தொடர்புடையதால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
திமுக கூட்டத்தில் பாலியல் தொல்லை! கதறி அழுத பெண் காவலர்! நிர்வாகிகளை கைது செய்ய காவல்துறை தீவிரம்!
கைது
இந்த புகாரையடுத்து காண்டிலாலை காவல்துறையினர் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்தனர். தான் குற்றமற்றவன் என்று காண்டிலால் எத்தனையோ முறை கூறியும் காவல்துறையினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. காண்டிலாலின் குடும்பம் வருமானத்திற்காக அவரை மட்டுமே சார்ந்திருந்தது. எனவே அவர் கைது செய்யப்பட்டவுடன் வருமானம் அனைத்தும் நின்றுபோனது. இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நடைபெற்று வந்தன. வழக்கின் முடிவில் இவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வறுமை
இதனையடுத்து 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இந்த இரண்டு ஆண்டில் இவரது குடும்பம் முற்றிலுமாக சிதைந்துபோனது. போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் வறுமை தலைவிரித்து ஆடியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த காண்டிலால் உடனடியாக வேலைக்கு போக தீர்மானித்துள்ளார். ஆனால், இவர் சிறையிலிருந்து வெளியே வந்ததுள்ளதால் இவருக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. எனவே வேலையும் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் குடும்ப சூழல் மேலும் மோசமாகியுள்ளது.
இழப்பீடு
இதனையடுத்து தன்னுடைய சிறைவாசத்திற்கு நீதி கேட்டு அவர் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதாவது தான் தவறாக கைது செய்யப்பட்டதால் தன்னுடைய குடும்பம் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளது என்றும் எனவே தனக்கு இழப்பீடாக ரூ. 10,006.02 கோடி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். சக உயிரின் மதிப்பை உணர்த்தவே இந்த அளவுக்கு அதிகமான தொகையை கேட்டுள்ளதாகவும் காண்டிலால் கூறியுள்ளார். இதில் ரூ.6 கோடி பல்வேறு செலவுகளுக்காக என்றும், ரூ.2 லட்சம் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாலும், வழக்கு செலவுகளுக்காகவும் என்று கூறியுள்ளார்.
மன உளைச்சல்
இந்த விவகாரம் குறித்து கண்டிலாலின் வழக்கறிஞர் விஜய் சிங் யாதவ் கூறியதாவது, "இந்த வழக்கால் கண்டிலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அவமானத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க அவர் இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகள் குறையும்" என்று கூறியுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் தனக்கு இழப்பீடாக பத்தாயிரம் கோடி ரூபாயை கேட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.