என் தந்தைக்கு எதிராக கிசுகிசு எழுதியுள்ளார் சஞ்சய் பாரு: பிரதமர் மகள் தாக்கு
டெல்லி: விமர்சனம் செய்து புத்தகம் எழுதியதன் மூலம் சஞ்சய் பாரு எனது தந்தைக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று பிரதமர் மன்மோகன்சிங்கின் மூத்த மகள் உபிந்தர் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமரின் ஊடக ஆலோசகராக பதவி வகித்த சஞ்சய்பாரு எழுதிய விபத்தாக வந்த பிரதமர் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சோனியாகாந்தியின் கைப்பாவைபோல மன்மோகன்சிங் செயல்பட்டதாக விமர்சனம் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமரின் மூத்த மகள் உபிந்தர்சிங் அளித்துள்ள பேட்டியில், கூறியுள்ளதாவது:
அதீத அளவில் புனைந்து எழுதப்பட்ட அந்த புத்தகத்தால் நாங்கள் கடும் கோபத்தில் உள்ளோம். எனது தந்தைக்கு சஞ்சய்பாரு துரோகம் இழைத்துவிட்டார். சர்ச்சைக்குறிய கருத்துகளை நாட்டின் பிரதமருக்கு எதிராக இட்டுக்கட்டி எழுத அவருக்கு தைரியம் வந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.
தேர்தல் நடைபெறும் நேரத்தில் புத்தகத்தை வெளியிட்டுள்ளதற்காக எழுத்தாளர்கள் என்ன வேண்டுமானாலும் காரணம் கூறலாம். ஆனால் என்னை பொறுத்தளவில், இந்த நேரத்தில் புத்தகத்தை வெளியிட வேறு காரணங்கள் உள்ளதாக நினைக்கிறேன்.
இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறுவது அபத்தமானது. பிரதமரின் நலன் விரும்பி என்று சஞ்சய்பாரு இனிமேலும் கூறமுடியாது.
கிசுகிசுக்களையும், உறுதி செய்யப்படாத பேச்சுக்களையும் ஆதாரமாக கொண்டு சஞ்சய்பாரு புத்தகம் எழுதுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.