சர்ச்சைகள் நடுவே, கோவாவில் பாஜக அரசு பதவியேற்பு.. 4வது முறையாக முதல்வரானார் மனோகர் பாரிக்கர்
கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பனாஜி: கோவா மாநிலத்தின் 4-ஆவது முறையாக மனோகர் பாரிக்கர் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்றார்.
கோவாவில் நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறியக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைக் கோரியது.
அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவியேற்க இருந்தார். எனினும் அவர் இன்று பதவியேற்பதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம் மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்க உள்ளதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க காங்கிரஸ் கோரிய மனுவுக்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பனாஜியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து விட்டார்.
மாநிலத்தின் முதல்வராக 4-ஆவது முறையாக பதவியேற்ற பாரிக்கர் வரும் வியாழக்கிழமை சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.