ஊழல் நீதிபதியை காப்பாற்ற மன்மோகன்சிங்கை மிரட்டியது திமுக? மார்க்கண்டேய கட்ஜூ திடுக் தகவல்
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை திமுக மிரட்டியதாக பிரஸ் கவுன்சில் தலைவரான நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது இணைய பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
2004ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது கூடுதல் நீதிபதி நியமனத்தில் பல குளறுபடிகள் நடைபெற்றது; கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன.
உளவுத்துறை விசாரணை
இது தொடர்பாக நான், அப்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.சி.லோஹதிக்கு கடிதம் ஒன்று எழுதினேன். நான் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டு விவரங்கள் குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை
உளவுத்துறையின் அறிக்கையின்படி நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை தான் எனவும், அதனால் கூடுதல் நீதிபதியாக இருந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் எனக்கு பதில் அனுப்பி இருந்தார்.
இக்கட்டில் காங்கிரஸ்
அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதும், லோக்சபாவில் அக்கட்சி பெரும்பான்மை பலத்தை பெற கூட்டணி கட்சிகளின் ஆதரவையே நாட வேண்டிய நிலையில் இருந்தது. இதனால் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டிய இக்கட்டான நிலை காங்கிரசுக்கு இருந்தது.
மன்மோகனை மிரட்டிய அமைச்சர்
எனக்கு கிடைத்த தகவலின்படி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்டு கொண்டிருந்த போது, காங்கிரஸ் கூட்டணியில் மிகப் பெரிய கூட்டணி கட்சியின் (திமுக) அமைச்சர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் மன்மோகன் சிங்கை சந்தித்து, ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த கூடுதல் நீதிபதியை உங்கள் அரசு நீக்கினாலோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுத்தாலோ நீங்கள் நியூயார்க்கில் இருந்து திரும்பும் போது இங்கு உங்களின் ஆட்சி இருக்காது என மிரட்டி விட்டு வந்துள்ளார்.
மன்மோகனுக்கு தைரியம் கொடுத்த காங். அமைச்சர்
இதனால் மன்மோகன்சிங் அதிர்ச்சி அடையவே, அங்கிருந்த ஒரு காங்கிரஸ் அமைச்சர் தான் பார்த்துக் கொள்வதாக கூறி மன்மோகனுக்கு தைரியம் அளித்துள்ளார். அதன்படி அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேச, அந்த கூடுதல் நீதிபதியின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.
தப்பிய ஊழல் நீதிபதி
இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதியிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் அந்த கூடுதல் நீதிபதியின் மீது நடவடிக்கை எடுத்தால் பெரும் நெருக்கடி ஏற்படும் என பதிலளித்தார்.
நிரந்தர நீதிபதியானார்
ஆர்.சி.லஹோதிக்கு பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒய்.கே.சபர்வால், அந்த நபர் கூடுதல் நீதிபதியாக மேலும் ஓராண்டு நீட்டிக்க உத்தரவிட்டார். அவரை தொடர்ந்து தலைமை நீதிபதியாக நியமனமான கே.ஜி.பாலகிருஷ்ணன் அந்த நபரை வேறு ஒரு உயர்நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதியாக மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இவ்வாறு கட்ஜூ தமது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.