நீட் அவசரச் சட்டம்.. தமிழக அரசு நீதிமன்றத்தை அவமதித்து விட்டது.. இந்திய மருத்துவ கவுன்சில் வாதம்!
நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி : நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு கோரி கொண்டு வரவுள்ள அவசர சட்டத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் போராடி வருகிறது, சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போதும் மத்திய அரசு வழக்கறிஞர் நீட் அவசர சட்டத்திற்கு ஆகஸ்ட் 22க்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று அவர்கள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
மத்திய அரசு அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டை இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் இந்திய மருத்து கவுன்சில் தமிழக அரசின் நீட் தேர்வுக்கு அவசர சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றுவது சரியல்ல என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நிலைப்பாட்டை கடைபிடிக்கும் போது சமநிலையை கடைபிடிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. நீட் தேர்வு அடிப்படையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வாதிட்டுள்ளது.
அதேநேரம், தமிழக அரசின் சட்டம் சரிதான் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.