மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறார் சித்தராமையா.. தைரியம் கொடுத்த தமிழக அரசியல் குளறுபடி
தமிழகத்தில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவிவரும் நிலையில், கர்நாடகா மேகதாது திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக கர்நாடகாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர்: எத்தனை தடைகள் வந்தாலும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசனில் நேற்று நிருபர்களிடம் அவர் மேலும் கூறுகையில், ரூ.5900 கோடி திட்டமதிப்பிலான மேகதாது அணை திட்டத்திற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது என்றார்.
காவிரி நதிநீர் தமிழகத்திற்கு செல்லும் போக்கை மேகதாது அணை தடுக்காது என்றும், கர்நாடகாவின் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவைகளுக்காக இந்த திட்டம் அவசியப்படுவதாகவும் கூறினார். இதற்கான திட்டவரைவு தயாரிக்க உலகளவில் டெண்டர் விடப்பட்டுள்ளளது. இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்ற அவர், கர்நாடகாவில் அதிக மழை பெய்து 4 அணைகளும் நிரம்பிய பின்னர் தமிழகத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.
இது குடிநீர் திட்டம் என்பதால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறுவதாக ஆகாது என்பதால் சட்ட சிக்கல் ஏற்பாடு. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது புரியவில்லை. அனேகமாக அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்ப்பை கிளப்பி வருகிறது என நினைக்கிறேன் என்றார் சித்தராமையா.
தமிழகத்தில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவிவரும் நிலையில், கர்நாடகா மேகதாது திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக கர்நாடகாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.