மண்டோதரி பேச்சைக் கேட்டிருந்தால் ராவணன் இப்படி ஆகியிருப்பானா... ஆர்.எஸ்.எஸ். பகவத் பரபர பேச்சு
போபால்: ராவணன் தனது மனைவி மண்டோதரியின் பேச்சைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் இன்று கொடும்பாவியாக கொளுத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்காது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
அத்தோடு நில்லாத மோகன் பகவத், ஆண்கள் அனைவரும் மண்டோதரியின் கதையைப் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். போபாலில் நடந்த கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா எழுதிய பரிதாப்த் லங்கேஸ்வரி என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் இப்படிக் கூறினார் பகவத்.
நூல் வெளியீட்டு விழாவில், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் செளகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:-
மண்டோதரியைப் பாருங்கள்
ஆண்கள் ராவணனின் மனைவி மண்டோதரி கதையைப் படிக்க வேண்டும். மண்டோதரியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மண்டோதரி பேச்சைக் கேட்டிருந்தால்
ராவணன் தனது மனைவி பேச்சைக் கேட்கவில்லை. மனைவியை மதிக்கவில்லை. கேட்டிருந்தால், இன்று கொடும்பாவியாக கொளுத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.
மனைவி பேச்சைக் கேளுங்கள்
எனவே இங்குள்ள ஆண்களுக்கு நான் கூறும் செய்தி, மறவாமல் மண்டோதரி கதையைப் படியுங்கள். மனைவி பேச்சைக் கேளுங்கள். அவர்களை மதியுங்கள் என்பதுதான்' என்றார்.
மனிதாபிமானம் மிக்க மண்டோதரி
சுமித்ரா மகாஜன் பேசுகையில், ‘சீதா மீது மண்டோதரிக்கு அனுதாபம் இருந்தது, இரக்கம் இருந்தது. தனது கணவன் செய்த செயல் தவறு என்று கூறியவள் மண்டோதரி. இது அவரது மனிதாபிமான முகத்தைக் காட்டுகிறது' என்றார்.
ஊர்மிளாவுக்காகப் பரிந்து பேசிய செளகான்
மத்தியப் பிரதேச முதல்வர் செளகான் பேசுகையில், ‘ராமாயாணத்தில் இன்னொரு அறியப்படாத பாத்திரம் உண்டு. அதுதான் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா. அவரைப் பற்றியும், அவரது தியாகத்தைப் பற்றியும் அதிகம் தெரியாமல் போனது வருத்தத்திற்குரியது' என்றார்.