மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு... அடையாள அட்டைகளில் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு
டெல்லி : அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஆதார் எண்ணுடன் லேமினேஷன் செய்யப்பட்ட அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை அல்லது வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் முறையான வகையில் இல்லை எனப் புகார் எழுந்ததையடுத்து, இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகளுக்கு, மத்திய பணியாளர் - ஓய்வூதியதாரர் நல அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில், ஓய்வூதியதாரர் அடையாள அட்டைகளில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும். அத்துடன் ஆதார் எண்ணும் (ஆதார் இருந்தால்) இணைக்கப்பட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியதாரர் அடையாள அட்டை (கையால் எழுதப்படாமல்) தெளிவான தாளில் அச்சிடப்பட்டதாகவும், அதனை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் பயனாளிகளிடம் வழங்கும்போது லேமினேஷன் செய்யப்பட்டு இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஓய்வூதியதாரர் அடையாள அட்டைகளில் தேசியச் சின்னம் இடம்பெறத் தேவையில்லை என மத்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.
ஓய்வூதியதாரர் அடையாள அட்டை என்பது பயனாளியை அடையாளப்படுத்துவதற்காக மட்டும் போதுமானது என்றும், அந்த அட்டையைக் காட்டி எந்தவொரு பாதுகாப்பு நிலையத்திலும் ஓய்வூதியதாரர்கள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்பதால், அதில் தேசியச் சின்னம் தேவையில்லை என்றும் கூறியிருந்தது.
மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகளின் கீழ் 50 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.