என்னங்க இப்படி இருக்கு.. ஆய்வின் போது பள்ளி கழிவறையை சுத்தப்படுத்திய அமைச்சர்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அம்மாநில அமைச்சர் பிரத்யுமான் சிங் தோமர், பள்ளியின் கழிவறை மிகவும் அசுத்தமாக இருந்ததையடுத்து அவரே கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.அம்மாநிலத்தில் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் ஆய்வு செய்து தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய பிரதேச ஆற்றல் துறை அமைச்சராக இருக்கும் பொழுது பிரத்யுமான் சிங் தோமர் குவாலியர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளில் பல இடங்களை சுற்றிப் பார்த்து அமைச்சர் அங்குள்ள மாணவ மாணவிகளிடம் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு கூறினார்

புகார் கூறிய மாணவி
அப்போது ஒரு மாணவி தங்கள் பள்ளியின் கழிவறை மிகவும் அசுத்தமாக உள்ளதாகவும், இதனால் தாங்கள் மிகவும் இன்னலைச் சந்தித்து வருவதாக கூறினார். இதையடுத்து நேராக கழிவறைக்கு சென்ற அமைச்சர் அது தூய்மை இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் மற்றும் பள்ளியின் ஊழியர்களை கடுமையாக திட்டினார்.

கழிவறையை சுத்தம் செய்த அமைச்சர்
தொடர்ந்து தனது உதவியாளர் ஒருவருடன் கழிவறைக்கு உள்ளே சென்ற அமைச்சர் திடீரென அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். கழிவறை முழுவதையும் நீரால் கழுவி தூய்மைப்படுத்திய அமைச்சர் மாணவி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததையடுத்து கழிவறையை தூய்மை செய்ததாக தெரிவித்தார்.

தூய்மைக்கான உறுதிமொழி
மேலும் தான் 30 நாட்களுக்கு தூய்மைப்பணிக்கான உறுதிமொழியை எடுத்துள்ளதாகவும், இதன்படி ஒவ்வொரு நாளும் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்வி மையங்களுக்குச் சென்று தூய்மைப் பணியை மேற்கொள்வேன் எனக் கூறினார். மேலும் அனைத்து மக்களுக்கும் தூய்மை பற்றிய தகவல் சென்று சேர வேண்டும் என தான் விரும்புவதாகவும் தூய்மையாக இருப்பது பற்றி இந்த பணியை தான் செய்வதால் ஒவ்வொருவரும் ஊக்கம் பெறுவார்கள் என்று கூறினார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தொடர்ந்து பள்ளியை ஒவ்வொரு நாளும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அமைச்சர் பிரத்யுமான் சிங் தோமர், மக்களும் தங்கள் வீடுகளிலும் தாங்கள் அடிக்கடி சென்று வரும் இடங்களிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications