மாயமான பெங்களூர் மாணவி பத்திரமாக திரும்பியது எப்படி..? சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள்
பெங்களூர்: பெங்களூரில் மாயமான 13 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதன் பின்னணியில் அகமதாபாத் ரயில் நிலையத்தின் டிக்கெட் பரிசோதகர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பெங்களூர் ராஜாஜிநகரிலுள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி மதுகிருஷ்ணா மகள், பூஜிதா, கடந்த 24ம் தேதி முதல் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். சிறுமி போட்டோ மீடியாக்களில் வைரலானது.
இந்நிலையில் இரு தினங்கள் முன்பு சிறுமி பத்திரமாக பெற்றோரிடம் திரும்பி சேர்ந்தார். இதற்கு முக்கிய காரணம் அகமதாபாத் ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகர்.
கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் வருத்தத்தில் இருந்த சிறுமி, சம்பவத்தன்று, வீட்டைவிட்டு வெளியேற திட்டமிட்டு, ஸ்கூல் பேக்கில் யாருக்கும் தெரியாமல் ஆடைகளை எடுத்து வைத்துக்கொண்டு, பள்ளி கிளம்பியுள்ளார்.
பள்ளியிலிருந்து நைசாக ஓட்டம்பிடித்து, சிட்டி ரயில் நிலையம் சென்ற சிறுமி, ஹாசன் மாவட்டம் அரிசிகெரே செல்லும் ரயில் நிற்பதை பார்த்து ஏறினார். பின்னர் அங்கிருந்து மும்பை வழியாக அகமதாபாத்துக்கு ரயிலில் சென்றுள்ளார்.
ரயில் நிலையத்தில் சிறுமியை பார்த்த டிக்கெட் பரிசோதகர் அந்த சிறுமியை அப்படியேவிடாமல் பக்கத்தில் போய் விவரம் கேட்டுள்ளார். அப்போது நடந்த விஷயங்களை தெரிந்து கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அகமதாபாத் போலீசார், பெங்களூர் போலீசாரை தொடர்பு கொண்டு விவரம் கேட்டபோது, அது மாயமான சிறுமி என்பது உறுதியானது. இதையடுத்து பெங்களூர் போலீசார் சிறுமி பெற்றோருக்கு தகவல் கூறினர். மும்பையிலிருந்து பெங்களூருக்கு சிறுமி ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
மகிழ்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோருக்கு மற்றொரு கவலையும் வந்தது. வரும் வழியில் சிறுமி வேறு எங்கும் இறங்கி போய்விடக் கூடாதே என்ற கவலை அது. எனவே, பெங்களூரிலிருந்து 450 கி,மீ முன்பாக உள்ள ஹூப்ளி நகரிலுள்ள தங்கள் உறவினர்களுக்கு தகவல் சொல்லி, ரயில் அங்கு வரும்போதே பூஜிதாவை இறக்கிக்கொள்ள கேட்டுக்கொண்டனர்.
அவ்வாறே ஹூப்ளியில் உறவினர்கள் சிறுமியை ரயிலில் இருந்து இறக்கிக்கொண்டனர். அதற்குள் ஹூப்ளி சென்ற பூஜிதாவின் பெற்றோர், பிரிந்த குழந்தை பத்திரமாக வந்ததை பார்த்து கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.