குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஆட்சியை கவிழ்த்து கவிழ்த்து கபடி ஆடிய மாஜி பாஜக முதல்வர்கள்!!
குஜராத் முதல்வராக விஜய ரூபானி பதவியேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் கேசுபாய் பட்டேல், வகேலா, மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
Recommended Video
அகமதாபாத்: குஜராத்தில் 2-வது முறையாக முதல்வராக விஜய ரூபானி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இப்பதவியேற்பு விழாவில் மாற்றி மாற்றி ஆட்சியை கவிழ்த்து கவிழ்த்து விளையாடிய பாஜக மாஜி முதல்வர்கள் ஒன்றாக கரம் கோர்த்து பங்கேற்றனர்.
குஜராத் சட்டசபை தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என பாஜக வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. 6-வது முறையாக பாஜக அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
குஜராத் முதல்வராக விஜய ரூபானி 2-வது முறையாக மீண்டும் பதவியேற்றார். இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கேசுபாய் பட்டேல், சங்கர்சிங் வகேலா உள்ளிட்டோர் பங்கேற்றார்.
ஆட்சி கவிழ்ப்பாளர்கள்
குஜராத்தில் 22 ஆண்டுகால பாஜக ஆட்சி நீடிக்க இந்த மூவரும்தான் முக்கியமானவர்கள். அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஒருவரை ஒருவர் கவிழ்த்து கபடி ஆடியவர்களும் கூட.
கவிழ்த்த வகேலா
1980-ல் பாஜக தொடங்கப்பட்ட நிலையில் 1995-ம் ஆண்டு கேசுபாய் பட்டேல் தலைமையில் குஜராத்தில் முதலாவது பாஜக அரசு அமைந்தது. இந்த ஆட்சி அமைந்து 7 மாதங்கள்தான் ஆகியிருந்தது. சங்கர் சிங் வகேலா கலகக் குரல் எழுப்பி கேசுபாய் ஆட்சியை கவிழ்த்தார்.
மத்திய அமைச்சராக வகேலா
பின்னர் தனிக்கட்சி தொடங்கி வகேலா முதல்வரானார். அந்த கட்சியை காங்கிரஸுடன் இணைத்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் வகேலா. 1998-ம் ஆண்டு கேசுபாய் பட்டேல் மீண்டும் குஜராத் முதல்வரானார்.
மோடி விஸ்வரூபம்
அப்போது குஜராத் பாஜகவில் மோடி விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருந்தார். இதனால் 2001-ம் ஆண்டு கேசுபாய் அகற்றப்பட்டு மோடி அம்மாநில முதல்வரானார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வரை குஜராத் முதல்வராக இருந்தார் மோடி.
பாஜகவுடன் ஐக்கியம்
2012-ம் ஆண்டு கேசுபாய் படேல் பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் 2014 பிப்ரவரி மாதம் தமது தனிக்கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார் கேசுபாய் பட்டேல். அதேபோல குஜராத்தில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்தாததால் கடந்த ஜூலை மாதம் அக்கட்சியை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார் வகேலா. பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த வகேலா கட்சி அனைத்து இடங்களிலும் தோற்றது. இப்படி குஜராத் அரசியலில் கடந்த கால்நூற்றாண்டு காலமாக மையமாக இருக்கும் கேசுபாய் பட்டேல், வகேலா, மோடி மூவரும் நேற்று ஒரே மேடையில் இணைந்து இருந்தது பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.