அடுத்த வாரம் அட்லான்டிக் கடலை கடக்கப் போகிறார் மோடி.. ஏன் தெரியுமா?
டெல்லி: பிரதமர் மோடி அடுத்த வாரம், சுவிட்சர்லாந்துக்கும், மெக்ஸிகோவுக்கும் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பான விவரத்தை மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய கண்டத்தில் உள்ளது. மெக்ஸிகோ வடக்கு அமெரிக்கக் கண்டத்தில் உள்ளது. இங்கிருந்து அங்கு போவதற்கு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வடக்கு அட்லான்டிக் கடல் பரப்பு முழுவதும் பறந்து கடக்கவுள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 4ம் தேதி மோடி ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மேற்கண்ட நாடுகள் தவிர ஆப்கானிஸ்தான், கத்தார், அமெரிக்காவுக்கும் அவர் பயணப்படுகிறார்.

ஜூன் 5-6 தேதிகளில் சுவிட்சர்லாந்தில் மோடி சுற்றுப்பயணம் செய்வார். இரு தரப்பு வர்த்தகம், நேரடி அந்நிய முதலீடுகள் குறித்துப் பேச்சுவார்த்தையும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும் இந்தப் பயணத்தில் இடம் பெறும். இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே வலுவான பொருளாதார உறவு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயணத்தின்போது சுவிட்சர்லாந்து அதிபர் ஜோஹன் ஸ்னீடர் அம்மான்-ஐ சந்திப்பார் பிரதமர் மோடி.
இதை முடித்துக் கொண்டு ஜூன் 8ம் தேதி மெக்ஸிகோவுக்கு செல்கிறார் பிரதமர். அப்போதுதான் அவர் வடக்கு அட்லான்டிக் கடலை முழுமையாக கடந்து செல்கிறார். அங்கு மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோவைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தப் பயணத்தின்போது விண்வெளி, மின்உற்பத்தி, விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது.












Click it and Unblock the Notifications