கொய்யாப்பழத்தை வீசிவிட்டு, நகைக் கடை கல்லாவில் இருந்து ரூ.10,000 பணத்தை திருடிய 'திருட்டு குரங்கு'!
குண்டூர்: ஆந்திராவில் நகைக்கடை ஒன்றிற்குள் நுழைந்த குரங்கு ஒன்று, கல்லாப்பெட்டியில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைக்குள் குரங்கு ஒன்று நுழைந்தது. குரங்கு பழங்களைத் தானே திருடிச் செல்லும் என நினைத்து கடை ஊழியர்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர்.
அப்போது கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கொய்யாப்பழத்தை நகைக்கடைக்குள் வீசிய குரங்கு, சுமார் 20 நிமிடங்கள் வரை கடையில் உள்ள கவுண்ட்டர்கள் மீது தாவி குதித்து, சேஷ்டைகளை செய்தது.
பின்னர் இறுதியாக பில் போடும் இடத்திற்கு வந்த குரங்கு, கல்லாப்பெட்டி மேஜையின் மீது ஏறி அமர்ந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேஜையின் டிராயரைத் திறந்த குரங்கு, அதிலிருந்து நூறு ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை கையில் எடுத்தது. பின்னர் அங்கிருந்து தப்பி வெளியில் ஓடியது.
இதைக் கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குரங்கைத் துரத்திப் பிடிக்க அவர்கள் முயற்சித்தனர். ஆனால், ஊழியர்களின் கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவிய குரங்கு, மாடிப்படி வழியே தப்பிச் சென்றது.
இந்தக் காட்சிகள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
குரங்கு திருடிச் சென்ற பணக்கட்டில் பத்தாயிரம் ரூபாய் இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, குரங்கின் செய்கைகளைப் பார்க்கும்போது, அதற்கு யாரோ பயிற்சி அளித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.