3 பேரும் எந்திரி.. அவர் வர்றாரு... அமைச்சருக்காக நிறுத்தப்பட்ட விமானம், இறக்கி விடப்பட்ட 3 பயணிகள்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்காக ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டது. மேலும், அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் பயணிப்பதற்கு வசதியாக விமானத்திலிருந்து 3 பேரையும் கீழே இறக்கி விட்ட செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சண்டையில் கிழியாத சட்டையா.. சர்ச்சை இல்லாத மந்திரியா என்று கேட்கும் அளவுக்கு இந்தியாவில் மந்திரிமார்கள் செய்யும் அலப்பறைகளைத் தொகுத்து தினசரி பத்து செய்தி போடலாம்.

இந்த நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்த ஒரு விதிமீறல் அம்பலத்திற்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் செய்த விதி மீறல் என்பதை விட ஏர் இந்தியாவே இறங்க வந்து விதியைத் தூக்கி காற்றில் பறக்க விட்டுள்ளது.
லே நகரிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில்தான் இந்த அக்கப்போர். ஜூன் 24ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று லே நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. விமானம் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பவில்லை.
அமைச்சர் ரிஜிஜு வருவதால் அவருக்காக விமானம் காத்திருப்பதாக பயணிகளுக்குத் தெரிய வந்தது. இந்த நிலையில், விமானத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பயணிகளை அவசரம் அவசரமாக கீழே இறக்கினர்.
பின்னர் அமைச்சர் ரிஜிஜுவும், அவரது உதவியாளரும் விமானத்தில் ஏறினர். அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது.
ஆனால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரம் தொடர்பாக விவரம் கோரப்பட்டுள்ளது என்று முடித்துக் கொண்டார். ஆனால் அமைச்சர் ரிஜிஜுவும் என்னால் விமானம் தாமதமாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறே விமானம் கிளம்பத் தாமதம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ரிஜிஜு கூறுகையில் விமானம் 11.40 மணிக்கு கிளம்பய வேண்டியது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்பட்டது என்றார்.
ரைட்டு விடுங்க!












Click it and Unblock the Notifications