மம்தாவை சந்தித்தார் முகுல் ராய்.. திரிணாமுல் காங்.கில் சேர்ந்தார்.. மே.வங்கத்தில் உச்சகட்ட திருப்பம்
கொல்கத்தா: பாஜக தேசிய துணை தலைவர் முகுல் ராய், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முகுல் ராய் சந்தித்து பேசினார்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக தக்க வைத்தது.
தேர்தலுக்கு முன்னதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகள் என பல முக்கிய தலைவர்களை பாஜ தன் வசம் இழுத்தது.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு.. பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம்.. மமதா பானர்ஜி திட்டம்!
பாஜக
ஆனால், தேர்தல் முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்தது. தேர்தல் தோல்வி அதிருப்தி காரணமாக, பாஜக நிர்வாகிகள் அக்கட்சி தலைமைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த பலர் மீண்டும் அக்கட்சிக்கே தாவப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மோடியுடன் சந்திப்பு
இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் பாஜவில் இருந்து யாரும் விலகி செல்வதை தடுக்கும் விதமாக ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. ஆனால், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்களான சுவேந்து அதிகாரி, முகுல் ராய் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சுவேந்தி அதிகாரி டெல்லியில் சென்று இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்த சுவேந்து அதிகாரி, பிரதமர் மோடியையும் சந்தித்து மேற்கு வங்க அரசியல் குறித்து விவரித்தார்.
மறுக்கவில்லை
இந்நிலையில் முகுல் ராய் மனைவி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரால் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனா முகுல்ராய் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார் என்றும் அதனால் தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இந்த செய்தியை முகுல்ராய் மறுக்கவோ, ஆதரிக்கவோ இல்லை.
சற்று நேரத்தில் சந்திப்பு
உச்சகட்ட திருப்பமாக முகுல் ராய் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேரப்போவது உறுதி என்று செய்திகள் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் விதமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முகுல் ராய் சந்தித்து திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்,. இன்றும் நிறைய பேர் வருவார்கள் என்று முகுல்ராய் கூறினார். இந்த சூழலில், மேலும் பல பாஜ எம்எல்ஏ.க்கள் திரிணாமுல் தலைமையைத் தொடர்பு கொண்டு, மீண்டும் கட்சிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனால் பாஜக அதிர்ச்சியுடன் கட்சியனரை சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறது.