பலாத்காரம்-பையன்கள் தவறு செய்வார்கள்.. அதற்காக தூக்கு தண்டனையா? முலாயம்சிங் கடும் எதிர்ப்பு!!
மொரதாபாத்: பலாத்கார வழக்குகளில் தூக்கு தண்டனை விதிப்பதற்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:
பொதுவாக பையன்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு பெண் தம்மை பலாத்காரம் செய்துவிட்டனர் என்று புகார் தெரிவித்தார்..
உடனே மூன்று ஏழை பையன்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பலாத்கார சம்பவங்களுக்கெல்லாம் தூக்கு தண்டனையா? அவர்கள் பையன்கள்.. தவறு செய்வார்கள்..
மும்பையில் இப்படித்தான் இரண்டு மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்டங்களை நிச்சயம் மாற்ற முயலுவோம். பொய்யான பலாத்கார புகார் தெரிவிப்போருக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்வோம்.
இவ்வாறு முலாயம்சிங் யாதவ் பேசினார்.
பலாத்கார சம்பவங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோருவது பல அமைப்புகளின் கருத்தாக இருக்கிறது. ஆனால் இதை முலாயம்சிங் யாதவ் மிகக் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.