சண்டிகரில் உள்ள எலான்டே ஷாப்பிங் மாலை ரூ.1,785 கோடிக்கு வாங்கிய மும்பை நிறுவனம்
சன்டிகர்: சன்டிகரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றை மும்பையைச் சேர்ந்த கார்னிவல் குழுமம் ரூ.1, 785 கோடிக்கு வாங்கியுள்ளது.
லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் சன்டிகரில் எலான்டே மாலை கட்டியுள்ளது. அந்த ஷாப்பிங் மாலில் ஹயாத் சொகுசு ஹோட்டல், அலுவலக இடம், பல முன்னணி பிராண்டுகளின் கடைகள், விளைாட்டு இடம், 8 ஸ்கிரீன்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் ஆகியவை உள்ளன. 20 ஏக்கரில் அமைந்துள்ள இது தான் வட இந்தியாவின் மிகப்பெரிய மால் ஆகும்.
இந்நிலையில் எலான்டே மாலை மும்பையைச் சேர்ந்த கார்னிவல் குழுமம் ரூ.1, 785 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இது தான் இந்தியாவில் அதிக விலைக்கு போன கட்டிட வளாகம் ஆகும். முன்னதாக அபாட் இந்தியா நிறுவனம் மும்பையில் உள்ள பந்த்ரா கர்லா காம்பிளக்ஸில் உள்ள கோத்ரேஜ் பிகேசியில் அலுவலக இடத்தை ரூ.1, 479 கோடிக்கு வாங்கியது தான் அதிக விலைக்கு விற்பனையான இடமாக இருந்தது.
கடந்த ஆண்டு யுனிடெக் நிறுவனம் ஐடி பார்க்குகளில் உள்ள தனது சொத்துக்களை ரூ.2 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்தது. ஆனால் அது 6 சொத்துக்களின் மதிப்பு ஆகும். எல் அன்ட் டி நிறுவனம் எலான்டே மாலுக்காக இதுவரை ரூ.1, 500 கோடி செலவு செய்துள்ளது.
அந்நிறுவனம் எலான்டே மால் போன்று மும்பையிலும் ஒரு மாலை கட்ட திட்டமிட்டுள்ளது.