மியான்மர் எல்லையில் தீவிரவாதிகளுக்கு ‘செய்கூலி’ கொடுத்த ராணுவம்... ‘சேதமின்றி’ தப்பியது எப்படி?
டெல்லி: மியான்மர் அரசு உதவியுடன் எல்லைப்பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதல்தான் இன்றைய பரபரப்புச் செய்தி. இந்த தாக்குதல் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் ராணுவத்தினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மணிப்பூர் தாக்குதல் சம்பவத்திற்கு செய்கூலியாக பதிலடி கொடுத்த ராணுவம், சேதமின்றி வரக் காரணம் மியான்மர் அரசின் ஒத்துழைப்புதான். இது இருநாட்டு ராணுவத்தினரின் கூட்டு முயற்சிதான்.
வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகளை ஒடுக்க மியான்மர் - இந்திய அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மர் சென்ற சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டார். இந்த திட்டமிடல் தற்போது தீவிரவாதிகளை வேரறுக்க கைகொடுத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல்
மணிப்பூரில் கடந்த மாதம், நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் அமைப்பைப் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த தீவிரவாத குழு, எல்லைப் பகுதிகளில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக உளவுத் தகவல்கள் வந்தன.
ராணுவம் பதிலடி
தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களையொட்டியுள்ள மியான்மர் எல்லைக்குள் புகுந்த ராணுவத்தின் சிறப்புப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 50 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத் தரப்பில் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. மியான்மர் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவது சாதரணமான விசயமல்ல. இது நீண்டகால நட்பின் காரணமாக மியான்மர் நாட்டின் ஒத்துழைப்பினாலேயே இது சாத்தியமானது.
கூட்டு நடவடிக்கை
மியான்மரும் இந்தியாவும் நீண்டகாலமாகவே நட்பாக உள்ளன. எல்லைப்பகுதிகளில் தீவிரவாதத்தை ஒடுக்க இரு நாடுகளுமே உறுதி பூண்டுள்ளன. ஆங்சான் சூகிக்கு கடந்த 1992-ம் ஆண்டு ஜவகர்லால் நேரு விருது வழங்கி இந்தியா கவுரவித்தது. இது மியான்மரில் ராணுவ ஆட்சி நடத்தியவர்களை கோபப்படுத்தியது. இதனையடுத்து தீவிரவாத ஒழிப்பு கூட்டு நடவடிக்கைக்கு அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதுவே எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிக்க காரணமாக அமைந்து விட்டது. ஆனால் தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன.
தீவிரவாதிகளுக்கு எதிரான போர்
மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 9ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, அனைத்து விதமான தீவிரவாதச் செயல்களுக்கும் எதிரான போரில் சர்வதேச அளவிலான தோழமை அவசியம். குறிப்பாக, பயங்கரவாதம், போதை மருந்துக் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவும் ஆசியான் அமைப்பும் கூட்டாகச் செயல்பட வேண்டியுள்ளது. மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றுபட வேண்டும். மதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையிலான எந்தத் தொடர்பையும் நாம் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது உரையை அனைத்து நாடுகளுமே ஏற்றுக்கொண்டன.
சீனா ஆதரவு தீவிரவாதிகள்
மியான்மர் நாடு ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது. தங்கள் நாட்டு மண்ணில் தீவிரவாதிகள் தஞ்சம் புகுவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அதேநேரத்தில் பெரும்பாலான தீவிரவாத குழுக்கள் சீனா ஆதரவுடன் செயல்பட்டு வருவதால் மியான்மர் அரசால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
சுஷ்மா ஸ்வராஜ்
இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மர் சென்றிருந்த சுஷ்மா ஸ்வராஜ் தீவிரவாதிகளை ஒழிக்க கூட்டு நடவடிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தினார். தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மூலம் தற்போது இது சாத்தியமாகியுள்ளது.
இந்தியா-மியான்மர்
இதேபோன்று தீவிரவாத குழுக்களை ஒழிக்க இந்தியாவும் மியான்மரும் ஏற்கனவே இருமுறை கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. 1995 மற்றும் 2006ம் ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்குதல்கள் தீவிரவாத குழுக்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் ஆயுதபலம்
வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகளில் ஒரு குடையின் கீழ் மிகப்பெரிய அளவில் தீவிரவாத குழுக்கள் வேரூன்றியுள்ளன. இவர்கள் பலமுறை திடீர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தீவிரவாதிகள் மீது கடந்த 1995 மற்றும் 2006ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ கூட்டு நடவடிக்கையையும், புதன்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால், தீவிரவாதிகள் மிகப்பெரிய அளவில் பலமடைந்துள்ளனர். அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் அபாயகரமானவை.
தஞ்சம் புகும் தீவிரவாதிகள்
இந்தியாவின் எல்லையில் தாக்குதல் நடத்திவிட்டு எளிதாக மியான்மர் காட்டுப்பகுதிகளில் தஞ்சம் புகுந்து விடும் தீவிரவாதிகளை ஒடுக்க இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் தற்போது கை கொடுத்துள்ளது. அதுவும் மணிப்பூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டுள்ளது.
சீனாவின் உதவி
நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்புக்கு மணிப்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையது. இந்த அமைப்புக்கு சீனா உதவி செய்வதாக நம்பப்படுகிறது. இதேபோல போடோலாந்து தேசிய முன்னணி-சாங்பிஜித் (என்.டி.எப்.பி-எஸ்) தீவிரவாத அமைப்புக்கும், உல்பா தீவிரவாத குழுவிற்கும் சீனாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேறோடு களையவேண்டும்
இதில் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் ( என்எஸ்சிஎன்-கே) என்ற அமைப்புதான் இந்தியா - மியான்மர் எல்லை வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பை வேறோடு களையவே இருநாட்டு ராணுவமும் கூட்டாக செயல்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த தீவிரவாத அமைப்பை ஒடுக்க மியான்மர் நாட்டின் ஒத்துழைப்பை இந்தியா கேட்டுக்கொண்டது. இதற்காக கடந்த ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது இதனையடுத்தே நேற்றைய தினம் மியான்மர் எல்லைப்பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த முடிந்துள்ளது.