மத்திய அமைச்சராவதால் நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ ராஜினாமா!
கோஹிமா: நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவதால் நாகாலாந்து மாநில முதல்வர் நெய்பியூ ரியோ தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
நெய்பியூ ரியோவின் நாகாலாந்து மக்கள் முன்னணியானது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. நாகா மக்கள் முன்னணி லோக்சபா தேர்தலில் 1 தொகுதியில் வென்றுள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட நெய்பியூ ரியோ 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திலும் நெய்பியூ ரியோ கலந்து கொண்டார்.
அவருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து கோஹிமா திரும்பிய நெய்பியூ ரியோ இன்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரிடம் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் .ஆளுநரும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.
மேலும் நாகாலாந்தின் புதிய முதல்வராக ஜிலியாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்க இருக்கிறார்.
வரும் 26-ந் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் போது நெய்பியூ ரியோவும் மத்திய அமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.