ஆப்கான், கத்தார், அமெரிக்கா.... 5 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார் மோடி
டெல்லி: அமெரிக்கா, கத்தார், ஆப்கானிஸ்தான், ஸ்விட்சர்லாந்து மற்றும் மெக்ஸிகோ ஆகிய 5 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
ஜூன் 4-ந் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்து குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இது தொடர்பாக டெல்லியயில் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதலில் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியுடன் ஹெராட் மாகாணத்தில் உள்ள ஆப்கன்- இந்தியா நட்புறவு அணையை (சல்மா அணை) தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொடர்ந்து அங்கிருந்து கத்தாருக்கு செல்கிறார்.
கத்தார் பயணத்தை முடித்துவிட்டு ஞாயிற்று கிழமை ஸ்விட்சர்லாந்து செல்கிறார். அந்நாட்டு அதிபரை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்தும், இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புபண பதுக்கல் தொடர்பாகவும் வலியுறுத்தி பேசுகிறார்.
48 உறுப்பு நாடுகளைக் கொண்ட அணுசக்தி சப்ளை குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராகச் சேருவதற்காக முறையாக கடந்த மே 12-ஆம் தேதி விண்ணப்பித்தது. இந்த குழுவில் ஸ்விட்சர்லாந்தும், மெக்ஸிகோவும் முக்கிய உறுப்பினர்கள், எனவே அதில் இந்தியாவும் இடம்பெறுவதற்காக இரு நாடுகளின் ஆதரவை பெற மோடி பேச்சுவார்த்தை நடத்துவார்.
ஜூன் 6-ந் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் செல்லும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத் தொடரில் உரையாடவுள்ளார். ஜூன் 7-ந் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கிறார். ஜீன் 8-ந் தேதி மெக்ஸிகோ செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் என்ரிக் பெயிடோவை சந்திக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.