டெல்லியில் மீண்டும் பயங்கரம்... மணிப்பூர் இளைஞர் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை
டெல்லி: டெல்லியில் வெளி மாநிலத்தவர்கள் மீதான இன்னும் ஒரு கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. 30 வயதான மணிப்பூர் வாலிபர் தெற்கு டெல்லியில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கோட்லா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த நபர் தனது நண்பரின் வீட்டுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது 5 முதல் 6 பேர் வரை கொண்ட கும்பலால் வழிமறித்து சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். காரில் வந்த கும்பல் இதைச் செய்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தெற்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் பி.எஸ்.ஜெய்ஸ்வால் கூறுகையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. பலியான நபர் எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகள் யார் என்பதை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். என்ன காரணம் என்பதையும் அறிய முயன்று வருகிறோம் என்றார் அவர்.
கொலையான நபரின் பெயர் சலோனி. இவர் முனிர்கா பகுதியில் வசித்து வந்தார். வேலை எதையும் பார்க்கவில்லை.
சமீபத்தில்தான் மணிப்பூரைச் சேர்ந்த இன்னொரு நபரின் இறந்த உடல் சாக்கடையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு மணிப்பூர் வாலிபர் கொல்லப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான நிடோ டானியா என்ற மாணவர் சாந்தினி செளக் பகுதியில் சில கடைக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல கடந்த மே மாதம் டெல்லியில் ஒரு பெண் வக்கீலும், இரண்டு வட கிழக்கு மாணவர்களும் தாக்கப்பட்டனர். இவர்களைத் தாக்கியது இன்னொரு வக்கீல் கும்பலாகும்.
தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான கிரன் ரிஜ்ஜு கூறுகையில், இது வருத்தம், கவலை தருகிறது. மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications