அவதூறாக பேசியதாக... மோடி மீது தேர்தல் ஆணையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி புகார்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடத்தை விதிகளை மீறி அவதூறாக பேசியதாக பிரதமர் நரேந்திரமோடி மீது தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இங்கு நேற்று மாலையுடன் முடிவடைந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், உதம்பூர், பூஞ்ச் நகரங்களில் மோடி பிரச்சாரம் செய்தபோது, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்தவாறு தொலைபேசி மூலமாக பகல்கா மாவட்டம், அகால்டாவில் கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் செய்ததாகவும், இதற்கு அரசுக்கு சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.