பீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்
மும்பை: பீட் தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த கோபிநாத் முண்டேவின் குடும்ப உறுப்பினர் யாராவது போட்டியிட்டால், அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மராட்டிய மாநிலம் பீட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மோடி மந்திரிசபையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பதவியேற்றவர் கோபிநாத் முண்டே. இவர் இம்மாதம் 3ம் தேதி டெல்லியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கோபிநாத் முண்டேவின் மறைவிற்கு அனைத்துக் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது.
இந்த இரங்கல் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே, கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘கோபிநாத் முண்டே இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அந்த இடத்தில் அவரது மகள் பங்கஜா இருக்கிறார். தந்தையின் வெற்றிடத்தை மகள் பங்கஜா நிச்சயம் நிரப்புவார்' எனத் தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங்கைத் தொடர்ந்து பேசிய சரத்பவார், ‘கோபிநாத் முண்டேயின் துயர மரணத்தால் பீட் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த இடைத் தேர்தலில் கோபிநாத் முண்டேயின் குடும்ப உறுப்பினர் யாராவது போட்டியிட்டால், அவரை எதிர்த்து எங்களது கட்சி வேட்பாளரை நிறுத்தாது' என உறுதியளித்தார்.