மலேசியாவுக்கு ஹனிமூன் சென்று திரும்பிய போது சோகம்! விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 4 பேர் பலி!
பத்தினம்திட்டா: கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ், கார் மோதி நடந்த விபத்தில் புதுமணத் தம்பதி உள்பட 4 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
பத்தினம்திட்டாவைச் சேர்ந்த நிகில், அனு ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூனுக்கு மலேசியா சென்ற தம்பதி இன்று அதிகாலை திருவனந்தபுரத்திற்கு திரும்பியுள்ளனர்.

புதுமணத் தம்பதியை பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் காரில் அழைத்து வந்துக் கொண்டிருந்தனர். அப்போது பத்தினம்திட்டாவில் கோநி என்ற இடத்தில் கார் வந்த போது எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் புதுமணத் தம்பதி நிகில், அனு, பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நிகில் கனடாவில் வேலை பார்த்து வந்தாராம். பேருந்தில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்தனர். அந்த பேருந்தின் டிரைவர் சற்று தூங்கியதே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பயணிகளுக்கும் டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
விபத்துக் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் இறுதி சடங்கு நிகிலின் சகோதரி , குவைத்தில் இருந்து வந்ததும் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications