பெங்களூர்: கழிவு நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது தமிழக சிறுமி
கீதா என்ற அந்த சிறுமி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகளாவார். தசரா விடுமுறையை ஒட்டி பெங்களூரின் பிலேஹள்ளி பகுதியில் உள்ள தனது அத்தை தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
பெங்களூருவில் பிலேக்ஹள்ளி பகுதியில் நேற்று இரவு பலத்தமழை பெய்துள்ளது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வீட்டிற்குள் இழுந்து மழையை வேடிக்கை பார்ப்பதற்காக வெளியே வந்த சிறுமி கீதா கால்தவறி 4 அடி ஆழமும் 4 அடி அகலமும் கொண்ட கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்துவிட்டார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தனலட்சுமி உடனடியாக சிறுமியை மீட்க முயற்சி செய்தார். அவரது கையை பிடித்தும், தலைமுடியைப் பிடித்தும் இழுத்தார் ஆனால் அவரால் சிறுமியை முடியவில்லை. அதற்குள் வெள்ளநீர் சிறுமியை இழுத்துச்சென்றுவிட்டது.
இந்த சம்பவம் ஜெயதேவ் மருத்துவமனையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது.
உடனடியாக தீயணைப்பு மீட்புத்துறைக்கு போன் செய்தனர். ஜெயநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பிலேஹள்ளி பகுதிக்கு தீயணைப்பு வண்டி வருவதற்குள் 8 மணிக்கு மேலாகிவிட்டது. கால்வாய் முழுவதும் தேடிப்பார்த்தும் சிறுமி இருந்த அடையாளமே தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் ரூபா, கால்வாயில் மூடி சரியாக மூடப்படாத காரணத்தினாலேயே சிறுமி உள்ளே விழுந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த கழிவுநீர் அனைத்தும் மடிவாலா ஏரி பகுதியில் சென்று கலப்பதாக கூறிய அவர், சிறுமியின் உடல் ஒருவேளை அங்கு சென்றிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் லட்சுமி நாராயணன், சிறுமியை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
பிலேஹள்ளிப் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமானப்பணிகள் காரணமாக கழிவுநீர்கால்வாய்களின் மூடிகளை திறந்து வைத்துவிடுவதாக என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். குடியிருப்பு வாசிகள் விழிப்புணர்வோடு இருந்திருந்தால் சிறுமி தவறி விழ நேர்ந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே விடிய விடிய சிறுமியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் இதுவரை சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்புத்துறையினர் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.