4 பேர் கும்பலால் சீரழிக்கப்பட்ட டெல்லி பெண்- பலாத்காரத்திற்குப் பலியான நிர்பயாவின் நர்ஸாக இருந்தவர்!
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 33 வயது நர்ஸ் ஒருவர் பஞ்சாப் மாநிலம் புதல்டா என்ற இடத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் சீரழிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லியில், ஓடும் பேருந்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்த இளம் பெண் நிர்பயாவுக்கு நர்ஸாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா சந்தித்த அதே போன்ற துயரத்தை இந்த நர்ஸ் பஞ்சாபில் சந்தித்துள்ளார். இது பல்வேறு தரப்பிலிரும் கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பாஜக முதல் பல்வேறு கட்சிகள் வரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டெல்லி நர்ஸ்
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் இந்த நர்ஸ். 33 வயதாகிறது.
ரயில் நிலையத்திலிருந்து
இதுதொடர்பாக போலீஸில் அந்த நர்ஸ் கொடுத்துள்ள புகாரில், நான் திங்கள்கிழமை புதல்டா ரயில் நிலையம் வந்தடைந்தேன். அங்கு லக்வீந்தர் என்பவர் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தார். லக்வீந்தரின் மனைவி ரமந்தீப் கெளரை எனக்கு நன்றாகத் தெரியும்.
ஹசன்பூர் கிராமத்தில் வைத்து
லக்வீந்தர் என்னை ஹசன்பூர் கிராமத்திற்கு ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அந்த இடம் மிகவும் தனிமையாக இருந்தது. அங்கு என்னை ஒரு அறையில் அமர வைத்தார். அங்கு ஏற்கனவே 3 பெண்களும், இரண்டு ஆண்களும் இருந்தனர்.
பாலியல் பலாத்காரம்
அங்கு வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் லக்வீந்தர் என்னை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டார். அப்போது நான் கத்திக் கூச்சல் போட்டேன். இதையடுத்து லக்வீந்தர் தப்பி ஓடி விட்டார் என்று கூறியுள்ளார்.
லக்வீந்தர் தொடர்பு எப்படி?
சில மாதங்களுக்கு முன்பு ரமந்தீப் கெளர் டெல்லிக்கு வந்தபோது இந்த நர்ஸை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏரற்பட்டுள்ளது. ரமந்தீப் தனது கணவருடன் சில பிரச்சினைகளில் இருந்ததால் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் தங்க வைத்து ஆறுதல் கூறியுள்ளார் இந்த நர்ஸ்.
கணவருடன் திரும்பினார்
இதில் ஆறுதல் அடைந்த ரமந்தீப் கெளர் தனது கணவருக்குப் போன் செய்து வரவழைத்து அவருடன் புதல்டா திரும்பினார்.
போனில் அழைத்த லக்வீந்தர்
சில நாட்களுக்கு முன்பு லக்வீந்தர் நர்ஸுக்குப் போன் செய்து, தனது மனைவி கவலைக்கிடமாக இருப்பதாகவும், உடனடியாக உங்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நர்ஸ் பஞ்சாப் விரைந்துள்ளார்.
மோசடியாக அழைத்துச் சென்று பலாத்காரம்
புதல்டா ரயில் நிலையத்தில் நர்ஸை அழைத்துச் சென்ற லக்வீந்தர், அவரை தனியான இடத்திற்கு மோசடியாக அழைத்துச் சென்று தனது நண்பர்களோடு சேர்ந்து பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
முரண்பாடுகள்!
ஆனால் பாலியல் பலாத்காரத்திற்குள்ளானதாக கூறப்படும் நர்ஸ் மருத்துவப் பரிசோதனைகளுக்கு மருத்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். மேலும் நர்ஸின் வாக்குமூலத்திலும் குழப்பம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
4 பேர் மீது வழக்கு
இருப்பினும் நர்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நான்கு பேர் மீது பாலியல் பலாத்காரம், கடத்தல், அடைத்து வைத்தல், குற்றச் செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளனர். மேலும் லக்வீந்தர் சிங் மற்றும் ராஜ்வீர் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சிகள் கண்டனம்
இந்த நிலையில் நர்ஸ் பாலியல் பலாத்காரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக கடும் கண்டனம்
பாஜக தலைவர் சம்பீத் பத்ரா என்பவர் கூறுகையில், இந்த செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சமாஜ்வாடி நரேஷ் அகர்வால்
சமாஜ்வாடி தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், இப்படிப்பட்ட செயல்கள் அதிகரித்து வருவது மோசமான ஆட்சியின் அடையாளம் ஆகும் என்றார்.
காங்கிரஸ் பர்கா சுக்லா
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஆனி ராஜா
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து மெளனம் சாதிக்கிறார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.