பீகார் மாநில முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்
பாட்னா: பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று மீண்டும் பதவியேற்றார். ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று பிகார் முதல்வராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் 2014ஆம் ஆண்டு மே மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், அந்தப் பதவிக்கு தனது ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சியை நிதீஷ் குமார் கொண்டு வந்தார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்கும் நிதீஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாநில முதல்வராக இருந்த ஜிதன்ராம் மாஞ்சி வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், பிகாரில் ஆட்சியமைக்க நிதீஷ் குமாருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரைச் சந்தித்துப் பேசிய நிதீஷ் குமார், மாநிலத்தின் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் ஞாயிறு மாலையில் நடைபெற்ற எளிமையாக நடைபெற்ற விழாவில் முதல்வராக நிதீஷ்குமார் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியும் பங்கேற்றார்.
நிதீஷ் குமார் தலைமையிலான புதிய அரசு, மார்ச் 16-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறியதாகத் தெரிகிறது.
பதவியேற்புக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார் சட்டப் பேரவையில், பெரும்பான்மையை நிருபிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அவரது அரசில் பங்கேற்பது குறித்து ஆர்ஜேடி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளன.
சட்டப்பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் 24 உறுப்பினர்களும், காங்கிரஸின் 5 உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆகியோர் பீகாரில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது நிதீஷ்குமாருக்கு பக்கபலமாகச் செயல்பட்டனர். மேலும் இந்த எம்எல்ஏக்களுடன், ஜக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் சேர்ந்து மொத்தம் 130 பேர் நிதீஷ் குமாருக்கு ஆதரவளித்தனர். ஆளுநர் மாளிகையிலும், டெல்லியில் குடியரசுத் தலைவர் முன்பும் அணிவகுத்து நின்று ஜக்கிய ஜனதா தளக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
அமைச்சரவையில் கூட்டணி கட்சிகள்
இந்த நிலையில் நிதிஷ்குமார் அரசில் பங்கேற்பதா? என்பது குறித்து கூட்டணிக் கட்சிகள் இன்னமும் முடிவு செய்யாமல் உள்ளன. சட்டப்பேரவையில் நிதீஷ் குமார் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அவருடைய அரசில் சேர்வது குறித்து காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செளத்ரி கூறியுள்ளார்.
ஆர்ஜேடி கட்சியின் மாநிலத் தலைவர் ராம் சந்திர பூர்வே கூறுகையில், "கட்சியின் தலைவர் லாலு பிரசாத் இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுப்பார். இது ஒரு கொள்கை அளவிலான முடிவாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவில் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொள்வார்' என்று கூறியுள்ளார்.
நிதீஷ் குமாரின் அமைச்சரவையில் பங்கேற்பதா? அல்லது வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதா? என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சுபோத் ராய் கூறியுள்ளார். அதேசமயம் சுயேச்சை எம்எல்ஏ துலால் சந்த் கோஸ்வாமி, நிதீஷ் குமார் அமைச்சரவையில் சேர்வது என முடிவு செய்துள்ளார்.
எந்த தொடர்பும் இல்லை
பீகாரில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் ஹுசைன், இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உட்கட்சி விவகாரம் என்றும், மாஞ்சி பதவி விலகியதற்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.