நித்யானந்தா தொடர்ந்த வழக்கு.. மாஜி சீடர் லெனின் கருப்பன் கைது
பெங்களூர்: அவதூறு வழக்கில், நித்தியானந்தா மாஜி சீடர் லெனின் கருப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் நித்தியானந்தாவும், நடிகையொருவரும் நெருக்கமாக இருப்பதை போன்ற காட்சிகள் தனியார் டிவி சேனலில் வெளியாகி நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவை வெளியிட்டது நித்யானந்தாவிடம் சிஷ்யராக இருந்த லெனின் கருப்பன் என்று கூறப்பட்டது. அவரும் பல பேட்டிகளில் நித்யானந்தா இடம்பெற்ற ஆபாச வீடியோ உண்மைதான் என கூறியிருந்தார்.
இதையடுத்து நித்யானந்தா சார்பில் பெங்களூர் ஹைகோர்ட்டில் லெனின் கருப்பனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நித்தியானந்தா தொடர்ந்த அவதூறு வழக்கில் லெனின் கருப்பன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்ய பெங்களூர் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் பெங்களூர் போலீசார் சென்னையில் லெனின் கருப்பனை இன்று கைது செய்துள்ளனர்.
சென்னை கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது லெனின் கருப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.