இரட்டை இலைக்கு லஞ்சம்... நேரில் பார்த்த சாட்சியம் வாக்குமூலம்- தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காது!
இரட்டை இலை சின்னத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் பெற்றதை நேரில் பார்த்த சாட்சி வாக்குமூலம் அளித்துவிட்டதால் இந்த வழக்கில் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காது என்று தெரிகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் பெற்றதை நேரில் பார்த்த சாட்சி வாக்குமூலம் அளித்துவிட்டதால் இந்த வழக்கில் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காது என்று தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்தை தனக்கே உரிதாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன், டெல்லி இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் அளித்ததாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தினகரனின் பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனித்து வந்த அவரது நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் விசாரணை
தினகரன், மல்லியை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த டெல்லி போலீஸார் தினகரன் அடிக்கடி செல்லும் இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், திருவேற்காடு, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி 16 பேருக்கு சம்மன் அளித்தனர்.
திகார் சிறை
இந்நிலையில் போலீஸ் கஸ்டடிக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தினகரனையும், மல்லியையும் திகார் சிறையில் அடைக்க நீதிபதி பூனம் சௌதரி உத்தரவிட்டதை தொடர்ந்து மே 1-ஆம் தேதி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய திருப்பம்
டெல்லியில் ஹவாலா ஏஜென்டிடம் இருந்து இடைத்தரகர் சுகேஷ் பணம் பெற்றதை நேரில் பார்த்ததாக திருவேற்காட்டை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் டெல்லி மாஜிஸ்திரேட்டிம் வாக்குமூலம் அளித்தார். மேலும் பணம் பெற்றதும் தமது செல்போனில் இருந்து சென்னை நபரிடம் சுகேஷ் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லி போலீஸாரால் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.
வசமாக சிக்கிய தினகரன்
சிறையில் உள்ள டிடிவி தினகரனின் நீதிமன்றக் காவல் மே 15-ஆம் தேதியும், சுகேஷின் நீதிமன்றக் காவல் மே 12-ஆம் தேதியும் முடிவடைகிறது. முக்கிய சாட்சியம் கிடைத்துள்ளதால் டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்களை வெளியே விட்டால் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை அழித்துவிடுவர் என்ற வாதத்தையும் டெல்லி போலீஸ் முன்வைக்க உள்ளது.