சசிகலா சிறை விதிமீறல்... ஆவணங்களை கோர்ட்டில் கொடுப்பேன்... அதிரடியாக சொன்ன டிஐஜி ரூபா!
சிறையில் சசிகலா பெற்ற சலுகைகள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் அளிக்க உள்ளதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : விதிகனை மீறி சசிகலா சிறையில் சலுகைகள் பெற்றது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க உள்ளதாக முன்னாள் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மை தான் என்று டிஐஜி ரூபா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிஜிபி சத்யநாராயணராவும் இந்த விதிமீறல்களை ஒப்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிற்கு செய்து கொடுக்கப்பட்டிருந்த வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து தனது அறிக்கையில் விரிவாக கூறியிருக்கிறேன். சிறையில் சசிகலாவிற்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கீடு, தனி சமையல் அறை, சொகுசு படுக்கை போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது முற்றிலும் உண்மை.
தனி அலுவலகம்
சசிகலா தன்னை சந்திக்க வரும் பார்வயைாளர்களை சிறை விதிக்கு மாறாக தனி அறை ஒன்றில் சந்தித்து வந்ததாகவும் குறிப்பிட்டார். சிறை வளாகத்தில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத அறையை இதற்காக அலுவலகம் போலவே செட்டப் செய்திருந்தார்கள். அந்த அலுவலகத்தில் சிசிடிவி கேமரா கிடையாது.
இளவரசிக்கும் வசதி
சசிகலாவை சந்தித்து சென்றவர்கள் விவரத்தோடு சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்த போது, அந்தக் காட்சிகளில் அவர் இல்லை. சசிகலாவுடன் இளவரசியும் அதே அறையில் இருந்ததால் அனைத்து வசதிகளும் அவருக்கும் கிடைத்துள்ளது.
சட்டப்படி சந்திக்க முடிவு
ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறியதற்காக சிறைத்துறை டி.ஐ.ஜி சத்யநாராயணா அனுப்பியுள்ள நோட்டிஸை சட்டப்படி எதிர்கொள்வேன். அறிக்கையில் நான் கூறிய குற்றச்சாட்டுக்களை டி.ஐ.ஜி சத்யநாராயணாவின் வழக்கறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முறையிடுவேன்
அனைவருக்கும் தெரிந்த ஒரு விதிமீறலைத் தான் நான் அம்பலப்படுத்தினேன், பின் எதற்கு தற்போது எனக்கு நோட்டிஸ் கொடுக்க வேண்டும். இதன் மூலம் சத்யநாராயணா யார் பக்கம் உள்ளார் என தெரிகிறது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை எனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பேன், என்று ரூபா தெரிவித்துள்ளார்.