தமிழகத்தில் குறிப்பாக கிராமங்களில் காங்கிரசிற்கு தனி வாக்குவங்கி உள்ளது: ஜி.கே.வாசன்
டெல்லி: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸிற்கு என தனி வாக்குவங்கி உள்ளது. அதனை யாரும் குறைத்து எடை போட முடியாது எனத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,
இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார் மத்திய அமைசர் ஜி.கே.வாசன்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சந்திப்பு குறித்து கூறியதாவது:-
மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி...
பிரதமரை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும்.
கண்டிப்பு...
இலங்கையோடு கண்டிப்புடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் 2-ம் கட்ட மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமூகமாக அமையும் என்பதை எடுத்துக் கூறினேன்.
அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு...
மேலும் ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் வரை இலங்கை ராணுவ வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
பின்னர் அவரிடம் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடியாமல் இருப்பது பற்றியும், தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுமா? என்பது பற்றியும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.வாசன் கூறியதாவது :-
தேர்தல் வியூகம்:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக காங்கிரஸ் செயல்பாடு குறித்து இது வரை எந்த நிலையையும் எடுக்கவில்லை. இதனால் தான் தமிழக காங்கிரஸ் அமைக்க வேண்டிய தேர்தல் வியூகம், தேர்தல் பணிகள் தாமதப்படுகிறது என்பது தான் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து.
விரைந்து செயல்பட வேண்டும்...
எனவே நாடாளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து கட்சியின் நலனையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரைந்து அறிவிக்க வேண்டும்.
வாக்குவங்கி...
என்னை பொறுத்த வரை தமிழகத்தில் காங்கிரசுக்கு தனிவாக்கு வங்கி உண்டு. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல்களில் அந்த வாக்கு வங்கி கணிசமாக இருக்கும். அதிலும் குறிப்பாக கிராமங்களில் தனி வாக்கு வங்கி இருக்கிறது.
தமிழக வளர்ச்சி...
எனவே யாரும் காங்கிரசின் வாக்கு வங்கி குறைவு என்று எடை போட முடியாது. மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்தில் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. அதை அடித்தளமாக வைத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
மேலிடத்தின் முடிவு....
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து காங்கிரஸ் பொறுப்பாளர்கள், உயர்மட்ட குழுவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இறுதி முடிவை மேலிடம் எடுக்கும்' என இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.