பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு அறை இல்லையாம்
கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கென சிறப்பு அறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை செல்லவிருக்கும் சசிகலாவிற்கு சிறப்பு அறை எதுவும் தயாராகவில்லை என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1991-1996 காலகட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. 21 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் ஏற்கனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருமே குற்றவாளிகள். ஜெயலலிதா மறைந்தவிட்ட காரணத்தால், அவரை விடுத்து மற்ற மூவரும் சிறைக்கு செல்ல வேண்டும். ஏற்கனவே குன்ஹா தீர்ப்பு வழங்கிய அடுத்த நொடி முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து 4 பேரும் பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சிறப்பு அறையில் ஜெ
அப்போது, ஜெயலலிதாவுடன் சசிகலாவும் சிறைக்கு சென்றதால் ஜெயலலிதாவிற்கு கிடைத்த அனைத்து வசதி வாய்ப்புகளும் சசிகலாவிற்கும் கிடைத்தது. இன்று ஜெயலலிதா இல்லாமல் சசிகலா மட்டும் தனியாக சிறைக்கு செல்லவிருப்பதால் அவருகென தனியான சிறப்பான அறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

சாதாரண அறை
சிறப்பு அறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா தரப்பு செய்து வருகிறது. என்றாலும், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் சிறை வட்டாரம் எடுக்கப்படவில்லையாம்.

சசி அப்செட்
ஆக, சசிகலா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தால், அவருக்கு சாதாரண அறைதான் என்பது உறுதியாகியுள்ளது. எவ்வளவு முயன்றும் முடியாததால் சசிகலா தரப்பு அப்செட் ஆகி இருக்கிறதாம்.

‘அக்கா’வின் அருமை
ஆனாலும், எப்படியும் சிறப்பு அறையை சசிகலாவிற்கு பெற்றுத்தர அவரது உறவினர்கள் தொடர்ந்து முயற்சிகளை எடுத்துக் கொண்டிகிறது. என்ன செய்வது ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சிறையில் இருந்தாலும் சிறப்பு அறையில் இருந்திருக்கலாம் என்று புலம்பி தள்ளுகிறாராம் சசிகலா. அவரை அவரது உறவினர் சமாதானப்படுத்தி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications