மூடப்பட்ட நோக்கியா ஆலை திறக்கப்படும்: பிரதமர் மோடி சூசகம்
டெல்லி: சென்னையில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க தனது அரசு முயற்சி செய்து வருவதாக பிரதரமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பின்லாந்தைச் சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவின் ஆலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 8 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்நிறுவன செல்போன்களை பெருமளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொள்முதல் செய்து வந்தது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவுடனான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு முறித்தது.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி சென்னையில் உள்ள நோக்கியா ஆலை மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து சிபிஎம் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்தபோது கூறுகையில்,
உங்களின் அக்கறை சரியே. 25 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்களாலேயே நோக்கியா ஆலை மூடப்பட்டது. அதற்கு எங்கள் அரசு காரணம் இல்லை.
வேலைவாய்ப்பை அதிகரிக்க அந்த ஆலை திறக்கப்பட வேண்டும் என்றார்.
மூடப்பட்ட நோக்கியா ஆலை திறக்கப்படும் என்று மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.