நீதித்துறை மீதான நம்பிக்கை காக்கப்பட்டுள்ளது.. ஜெ.க்கு காங். தலைவர் வாழ்த்து!
பெங்களூர்: பாஜக மட்டுமல்ல காங்கிரசில் இருந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து வந்துள்ளது. அதுவும் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியனிடமிருந்து.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில், பிரதமர் நரேந்திரமோடியே, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், தற்போது காங்கிரஸ் தரப்பில் இருந்தும் ஒரு வாழ்த்துக்குரல் வந்துள்ளது. அதுவும் வாழ்த்தை தெரிவித்திருப்பது வேறு யாருமல்ல, ராஜ்யசபாவின் துணை தலைவராக உள்ள பி.ஜே.குரியனாகும்.
ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மீண்டும் முதல்வராக பதவிக்கு வந்துள்ள உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். இது உங்களுக்கு ஒரு தார்மீக வெற்றியாகும். தமிழக மக்கள், நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை காக்கப்பட்டுள்ளது. உங்கள் வெற்றி மாநிலத்திலும், தேசிய அளவிலும் தொடர்ந்து, மக்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும், அனைத்துவகையிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று வாழ்த்திக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதம் புகழாரம் சூட்டுகிறது.
ராஜ்யசபா துணை தலைவராக குரியன் பதவி வகித்தாலும், காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து சென்றுள்ள முதல் வாழ்த்தாகவே இது பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது. அதேநேரம், கர்நாடக காங்கிரஸ் அரசு, ஜெயலலிதா விவகாரத்தில் அப்பீலுக்கு சென்றுள்ளதை, அதிமுக பத்திரிகையான நமது எம்ஜிஆர் கடும் சொற்களால் கண்டித்துள்ளது.