வெளிநாட்டினருக்கான இந்திய விசா கட்டணம் 50% அதிகரிப்பு
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணம் 50 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புதிய விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தை மத்திய அரசு 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசா கட்டணம், 100 டாலரில் இருந்து (ரூ. 6,449), 153 டாலராக (ரூ.9,867) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டவர், ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசாவிற்கு 162 டாலருக்கு பதில் (ரூ.10,448), 248 டாலர் (ரூ.15,994) செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கான விசா கட்டணத்திற்கு, 484 டாலருக்கு பதில் (ரூ.31,215), 741 டாலர் (ரூ.47,790) செலுத்த வேண்டும்.
கனடா, அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வருபவர்கள் வேலை வாய்ப்புக்கான விசாவிற்கு, 300 டாலருக்கு பதில் (ரூ.19,348), 459 டாலர் (ரூ.29,603) செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.