மருதாணி வைக்காத பெண் வேண்டாம்: திருமணத்தை நிறுத்திய வெளிநாட்டு மாப்பிள்ளை
ஹைதராபாத்: மணப்பெண் மருதாணி வைக்கவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார் ஒரு மணமகன். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள கன்சன்பாக் உமர் காலனி பகுதியை சேர்ந்தவர் மீர் மசூத் அலி (32). ஏற்கெனவே விவாகரத்து பெற்ற இவர், தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா என்பவரின் மகளுக்கும் கடந்த 9-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்துக்கு முன்பே மணமகனுக்கு வரதட்சணை அளிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி மணமகன் மீர்மசூத் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகளை காண அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது, மணப்பெண் தனது கையில் மருதாணி வைத்துக்கொள்ளாததை கவனித்த மணமகன் குடும்பத்தினர் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
உடனடியாக இதுகுறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர், மணமகனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத மணமகன், திருமணத்தை நிறுத்தி விடும்படி கூறியுள்ளார். மணமகனின் பெற்றோரும் திருமணத்தை நிறுத்துமாறு பெண் வீட்டாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டதாகவும், எனவே திருமணத்தை நிறுத்த வேண்டாமென்றும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் பலமுறை கேட்டுக் கொண்டபோதும், அதற்கு மணமகன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.
இது குறித்து மணப்பெண் வீட்டார் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.