விரைவில் என்.ஆர்.ஐ.களும் ஓட்டு போடலாம்!!!
டெல்லி: விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வருடாந்திர பிரவசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு டெல்லியில் நடக்க உள்ளது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் ஜனவரி 8ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். ஜனவரி மாதம் 9ம் தேதி வெளிநாட்டில் சாதனை புரிந்து வரும் இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாரதிய சம்மன் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தூதரகங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைப்பதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். பிரவசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சகம் குஜராத் அரசுடன் சேர்ந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் கயானா குடியரசின் அதிபர் டொனால்ட் ராமடோர். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதால் திவாஸ் நிகழ்ச்சிக்கு தென்னாப்பிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் அழைக்கப்பட்டுள்ளார் என்றார்.
முன்னதாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டதிருத்த மசோதா கடந்த 2010ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.