தெலுங்குதேசம், அசாம் கனபரிசத் போல விஸ்வரூபமெடுக்குமோ ஆம் ஆத்மி- கலங்கும் காங்கிரஸ்!!
டெல்லி: தெலுங்குதேசம், அசாம் கனபரிசத் போல கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் விஸ்வரூபமெடுத்துவிடுமோ என்று காங்கிரஸ் கட்சி கதிகலங்குவதாகவே தெரிகிறது.
வலுவான லோக்பால் மசோதா- இதுதான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே முன்வைத்த முழக்கம்.. இதற்காக தொடக்கத்தில் தொடைநடுங்கிய மத்திய அரசு ஹசாரேவை தாஜா செய்யப் போய் அவர் மாபெரும் சக்தி என்று கட்டமைக்கப்பட்டார்.
அப்படிப்பட்ட ஹசாரேவின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் அர்விந்த் கெஜ்ரிவால். பின்னர் ஹசாரேவை எப்படியெல்லாம் பலவீனப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்து அவரை ஓரம்கட்டிவிட்டது மத்திய அரசு. ஆனால் ஹசாரேவின் தளபதியான அர்விந்த் கெஜ்ரிவாலோ அரசியல் கட்சியை தொடங்கி குடைச்சல் முகத்தோடு டெல்லி சட்டசபை தேர்தலில் குதித்தார்.

ஊக்கப்படுத்திய கருத்து கணிப்புகள்
தொடக்கத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி போனியாவதே சிரமம் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் மாதாந்திர கருத்து கணிப்புகள் இந்த விமர்சனங்களை அடித்து நொறுக்கப் போய் பாரதிய ஜனதாவின் வயிற்றில் புளியரைக் கரைத்ததோ இல்லையோ காங்கிரஸின் நிம்மதியை குலைத்துப் போட்டது.

பறிபோகும் காங்கிரஸ் அரசு
டெல்லியை ஆளும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்கிறது கடைசி கருத்து கணிப்பு. இதனால் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கப் போகிறது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

ஆட்சிக் கனவில் கெஜ்ரிவால்
ஆனால் கெஜ்ரிவால் தரப்போ இன்னும் ஒருபடி மேலேபோய் ஆட்சியே நாங்கள்தான் அமைக்கப் போகிறோம்..அப்படி ஆட்சி அமைத்தால் முதல்நாளே டெல்லி ராம்லீலா மைதானத்தில் சட்டசபையைக் கூட்டி வலுவான லோக்பால் மசோதாவை டெல்லியில் முதலில் நிறைவேற்றிக் காட்டுவோம் என்று மார்தட்ட இப்போது அது பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

முன்னோடி ராமராவ்
ஆந்திர மாநிலத்தில் 1980களின் தொடக்கத்தில் என்.டி ராமராவ் தெலுங்குதேசம் கட்சியைத் தொடங்கிய போது இப்படித்தான் காங்கிரஸ் கட்சி அலட்சியமாகப் பார்த்தது. ஆனால் அடுத்தடுத்து இரண்டு தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களை வென்று காங்கிரஸ் மூச்சுவிடக் கூட முடியாத அளவுக்கு பெரும் புயல் அலைகளை உருவாக்கினார் அவர்.

அசாம் கனபரிஷத்
அதேபோல் அசாமில் மாநில உரிமைகளுக்காக போராடிய அசாம் கனபரிஷத் அரசியல் கட்சியாக உருவானபோது.. மாணவர்கள் எங்கே தேறுவார்கள் என்று எள்ளலுடன் பார்த்தது காங்கிரஸ். அதற்கும் விலைகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தெலுங்குதேசம் மற்றும் அசாம் கனபரிஷத்தின் தோற்றத்துக்கான காரணங்களும் கெஜ்ரிவால் கட்சியின் தோற்றத்துக்கான காரணங்களும் வேறாக இருக்கலாம்.

கதிகலங்கும் காங்கிரஸ்
ஆனால் புதிய கட்சிகள் உருவாகும் போது அவற்றை எள்ளலுடன் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் டெல்லியிலும் அதையே பின்பற்றியது. ஆனால் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே ஆந்திராவிலும் அசாமிலும் பட்ட அடி டெல்லியில் பலமாக இருக்குமோ என்ற கலங்கிக் கிடக்கிறது. இதனாலேயேதான் கெஜ்ரிவால்- ஹசாரே மோதல், நிதி முறைகேடு, அன்னிய நிதி என பலவகைகளில் வாக்குப் பதிவுக்கு முன்பாகவே கெஜ்ரிவால் கட்சியை முடக்கிவிடுவதில் முனைப்பு காட்டுகிறது காங்கிரஸ் என்றும் கூறப்படுகிறது.
எதுவாக இருந்தாலும் தீர்மானிக்கப் போவது என்னவோ எஜமானர்களாகிய மக்கள்தானே!












Click it and Unblock the Notifications