கர்நாடகாவில் டாய்லட் கிளீனரை குடிக்கச் வைத்து ராகிங்: நர்சிங் மாணவி கவலைக்கிடம் !
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் நர்சிங் மாணவியை டாய்லட் சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்து, சீனியர் மாணவிகள் ராகிங் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அஸ்வதி என்ற மாணவி, ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள அல் குமர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்துள்ளார்.
கடந்த மே மாதம் 9-தேதி ராகிங்கில் ஈடுபட்ட அக்கல்லூரியின் சீனியர் மாணவிகள், அஸ்வதியை கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைத்துள்ளனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவிகளும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்கு பின்னர் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அஸ்வதி, சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.
கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்ததால், அவரின் உணவுக்குழாய் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் அஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலித் சமூகத்தை சேர்ந்த அந்த மாணவி, 3 லட்ச ரூபாய் லோன் வாங்கிதான் நர்சிங் கல்லூரியில் சேர்ந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை அடுத்து குல்பர்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.